இந்திய திரைப்படங்களில் கலை இயக்குநராகப் பணிபுரிந்த ஆக்ஷிதா காமத் ஹாலிவுட் படங்களில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். ஆண் திரைப்படக் கலை இயக்குநர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு ஆக்ஷிதா காமத்திற்கு கிடைத்துள்ளது.
"ஆந்திரத்தில் இருக்கும் ரிஷி வேலி பள்ளியில் படிக்கும்போதே திரைப்பட மன்றத்தில் உறுப்பினராக இருந்தேன். வாரம் ஒரு படம் பார்த்து பல காட்சிகள் படமாக்கப்பட்ட விதத்தைப் பார்த்து அதிசயித்து, விவாதித்து வளர்ந்த காலம் அது. ரிஷி வேலி பள்ளியில் நுண்கலைப் படித்தேன். பள்ளியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு மேடை அமைப்பு அலங்காரம் செய்து கொடுக்கத் தொடங்கினேன். நாடகங்களிலும் பங்கு பெற்றேன். கலை வடிவமைப்பு நோக்கி அன்று நான் தொடங்கிய பயணம் இன்றும் தொடர்கிறது.
நான் பிறந்தது கொல்கத்தாவில். சென்னை நகரம் என்னை வளர்த்தது. அம்மா ஒரு கிராஃபிக் டிசைனர். அம்மா வீட்டிலும் அந்த வேலைகளைச் செய்வார். அதனால் நுண்கலையில் எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அம்மா டிசைன் செய்வதை ஆர்வத்துடனும் அதிசயத்துடனும் பார்த்து வளர்ந்தவள் நான். அம்மா வண்ணங்களையும் வரைபடங்களையும் கையாளும் திறமையைக் கண்டு அசந்து போய்...நானும் கொஞ்சம் கற்றுக் கொண்டேன்.
மும்பையில் சமூகவியல் பட்டப்படிப்பு. மும்பை திரைப்பட உலகின் தலைநகர் என்பதால் எனது கலைப்பசிக்கு தீனி கிடைக்கத் தொடங்கியது. முதலில் உதவியாளராகக் காலடி எடுத்து வைத்தேன். ஹிந்திப் படங்களின் கலைப் பிரிவில் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. தொடர்ந்து விளம்பரப் படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தன. "வேஸ்ட் இஸ் வேஸ்ட்', "ஜிந்தகி நா மிலேகி துபாரா' போன்ற படங்களில் எனது பங்களிப்பு உண்டு.
திருப்பம் 2011-இல் நடந்தது. அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சலில் பிரபல AFI Conservatory நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருக்கிறது என்று தெரிய வந்ததும் மனு செய்தேன். எனக்கு ஸ்காலர்ஷிப்புடன் வேலை செய்ய அனுமதியும் கிடைத்தது. இங்கே ՙart direction՚என்று சொல்வதை அங்கே ՙproduction design՚ என்பார்கள்.
பிரபல இயக்குநர் ஜேம்ஸ் காமரூன் தயாரித்து இயக்கும் "அவதார்' படத்தின் அடுத்த தொடர்களுக்குகாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். இயக்குநர் மனதில் என்ன கற்பனை செய்கிறாரோ, அதை நாங்கள் வடிவமைத்துக் கொடுக்க வேண்டும். அதுதான் எங்களின் வேலை. இந்த பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது நான் செய்த தவம் என்றுதான் சொல்ல வேண்டும்'' என்கிறார் ஆக்ஷிதா காமத்.
- ஏ. ஏ. வல்லபி