காஷ்மீர் ஸ்ரீநகரில் இருந்து 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் உள்ளது பந்திபூரா மாவட்டம். அதில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் குத்துச்சண்டை வீராங்கனையான 9 வயது தாஜாமுல். இவரின் தந்தை கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை செய்கிறார். தாஜாமுல் 2014-இல் உள்ளூரில் உள்ள ஒரு தற்காப்புக் கலை பயிற்சி அகாடமியில் குத்துச்சண்டை பழகத் தொடங்கினார். 2015- இல் இந்திய தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், தாஜாமுல் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 13 வயது போட்டியாளரை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். அதனையடுத்து கடந்த 2016 -ஆம் ஆண்டு ஜம்முவில் நடந்த மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இது குறித்து தாஜாமுல் கூறுகையில்:
"நான் ஒருநாள் விளையாட்டு அரங்கத்திற்கு அருகே நடந்து கொண்டிருந்தபோது சிறுவர், சிறுமிகள் குஸ்தி சண்டைப் பயிற்சி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். நானும் அங்கு சேர வேண்டும் என்று ஆசை எழ, தந்தையிடம் கூறினேன். அவரும் அனுமதித்தார். முதலில் என்னை எதிர்த்துப் போட்டியிடும் நபரைக் கண்டதும் சிறிது பயந்தேன். ஆனால் இந்தச் சண்டையில் வயதும் உடல் அமைப்பும் ஒரு விஷயமே இல்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்'' என்கிறார் தாஜாமுல். சமீபத்தில், தாஜாமுல் உலக சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ஐந்து நாட்களில் ஆறு வெற்றிகளைப் பெற்றார். சுமார் 90 நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டியில், அவர் சீனா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்து பங்கேற்ற வீராங்கனைகளை எதிர்த்துச் சண்டையிட்டு வென்று சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
- ரிஷி