கணவன் மனைவி உறவு மேலும் புனிதமாவது, அவர்களுக்கு குழந்தை பிறப்பதின் மூலம். இதன் மூலம் "பெற்றோர்' என்ற புதிய அந்தஸ்து அவர்களுக்கு சமுதாயத்தால் சூட்டப்படுகிறது. ஒரு குழந்தையின் பிறப்புக்கு தாயாரே ஆதாரம். அந்த குழந்தையை அவர் வயிற்றில் சுமக்கும் போதும், அந்த குழந்தை பிறந்த பின்பும் பராமரிப்பது மிக அவசியமாகிறது. இதற்கு தாய்க்குப் போதிய உதவி தேவை. உறுதுணையாக இருக்கும் கணவனுக்கும், மனைவிக்கு உதவி செய்ய ஏதுவாக விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த வகையில் சில நாடுகளில் எப்படி இந்த விடுமுறை வழங்கப்படுகிறது என பார்ப்போம்:
ஃபின்லாந்து
குழந்தை பிறப்புக்கு மருத்துவர், நிர்ணயித்துள்ள தேதிக்கு முன் 7 வாரமும், குழந்தை பிறந்தபின், 16 வாரங்களுக்கும், குழந்தையை பெறும் தாய்க்கு அரசு, முழு சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் தருகிறது. இதே சமயம் குழந்தை பிறந்த பின், ஏழு வாரங்களுக்கு, மனைவிக்கு ஒத்தாசையாக இருக்க கணவனுக்கும், முழு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது.
ஸ்வீடன்
வழக்கமான சம்பளத்தில், 80 சதவிகிதத்துடன், புதிய பெற்றோர் அதிக பட்சமாக 480 நாட்கள் விடுமுறை எடுக்கலாம். பொதுவாக, தாய்குலங்களுக்கு 18 வாரமும், ஆண்களுக்கு 90 நாளும் முழு சம்பளத்துடன் கூடிய விடுமுறை இந்தநாட்டில் உண்டு.
டென்மார்க்
குழந்தைகளைப் பெரும் தாய்மார்களுக்கு, இங்கு மொத்தம் 18 வார விடுமுறை முழுசம்பளத்துடன் வழங்கப்படும். இதில் குழந்தை பிறக்கும்முன் 4 வாரங்களும், பிறந்தபின் 14 வாரங்களும் அடக்கம். கணவருக்கு, முழு சம்பளத்துடன் இரண்டு வாரங்கள் விடுமுறை.
பெல்ஜியம்
குழந்தை பெறும் தாய்மார்களுக்கு இங்கு 15 வார விடுமுறை உண்டு. இதில் முதல் 30 நாட்களுக்கு 80 சதவிகித சம்பளமும், மீதி நாட்களுக்கு 75 சதவிகித சம்பளமும் வழங்கப்படும். கணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை உண்டு. இதில் மூன்று நாட்களுக்கு மட்டும் முழு சம்பளத்துடன் விடுமுறை உண்டு.
ஐஸ்லாந்து
இங்கு குழந்தை பெறும் பெற்றோருக்கு மொத்தம் 9 மாதம் விடுமுறை உண்டு. இதனைப் புதிய தாயார் 3 மாதமும், தந்தை 3 மாதமும் என எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 3 மாதத்தை தாயார் - தந்தை இஷ்டம் போன்று, தங்களுக்குள் பகிர்ந்து எடுத்துக் கொள்ளலாம். வழக்கமான சம்பளத்தில் 75 சதவிகிதம் மட்டுமே இந்த 9 மாத விடுமுறையில் வழங்கப்படும்.
- ராஜிராதா