டாக்டரைக் கேளுங்கள்: மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர். டாக்டர் எழிலரசி பிரசன்னா பதிலளிக்கிறார்

இந்த மூன்று மாதங்களும் உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டினீர்கள் என்றே நம்புகிறேன்.
டாக்டரைக் கேளுங்கள்: மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர். டாக்டர் எழிலரசி பிரசன்னா பதிலளிக்கிறார்

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான என் மகளின் வயது 42. கடந்த மூன்று மாதங்களாக அவளுக்கு மாதவிடாய் மாதம் முழுமையும் வந்துகொண்டு இருக்கிறது. அதற்காக ஆங்கில மருந்து ஒன்று GYNASET சாப்பிட்டதில், ஐந்து அல்லது பத்து நாள் தவிர மீதி நாளெல்லாம் ரத்தப்போக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது. இது என்ன நோய்? இதற்கு என்ன வைத்தியம் அல்லது எங்கு வைத்தியம் செய்தால் குணமாகும் என்று கூறவும்?
ஹபிபுன்னிஸா, பெங்களூரு.
தங்கள் மகளின் வயது 42 என்று குறிப்பிட்டுள்ளீர்கள். கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து உதிரப்போக்கு இருப்பதாகவும் கூறியுள்ளீர்கள். இது ABNORMAL UTERINE BLEEDING என்று சொல்லக்கூடிய மாதவிடாய் சம்பந்தப்பட்ட அறிகுறியாக இருக்கலாம். இந்தப் பிரச்னை கருப்பை கட்டிகள், கருப்பை வீக்கம், கருப்பை உள்சுவர் தடிமன், கருப்பை வாய்ப்புண், சினைப்பை கட்டிகள் எனப் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இவை ஏதும் இல்லாமல் மாதவிடாய் நிற்கும் தருவாயிலும் இதுபோன்ற உதிரப்போக்கு ஏற்படலாம். மாத்திரைகள் உட்கொள்வது தற்காலிகமான நிவாரணம் மட்டுமே தரும். நீங்கள் அருகில் இருக்கும் மகளிர் சிறப்பு மருத்துவரை ஆலோசனை செய்தாலே போதுமானது. அவர் உங்கள் மகளுக்குத் தகுந்த பரிசோதனைகளைப் பரிந்துரை செய்து தேவையான மருத்துவ ஆலோசனையும் வழங்குவார்.

எனக்குக் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. தாய்ப்பால் சுரக்கவில்லை. இதற்கு என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்?
நீலா, சென்னை-45
இந்த மூன்று மாதங்களும் உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டினீர்கள் என்றே நம்புகிறேன். தற்போது தாய்ப்பால் குறைவதற்கும், சுரக்காமல் போவதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். முக்கியமாக, தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருப்பதாக நினைத்து குழந்தைக்கு பசும்பாலோ, பவுடர்பாலோ புகட்டினால் நாளடைவில் தாய்ப்பால் சுரப்பது மிகவும் குறைந்துவிடும். குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் சுரக்க வேண்டும் என்றால் அமைதியான, ஆனந்தமான மனநிலை, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இவை இரண்டும் வேண்டும். குழந்தைக்குப் பால் புகட்டும்போது தங்கள் எண்ணமும் கவனமும் குழந்தையிடம் இருப்பது அவசியம். தாய்ப்பால் குறைவாக இருப்பதாக நினைத்து சஞ்சலப்பட வேண்டாம். நம்மால் குழந்தைக்குத் தேவையான அளவு பாலூட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பால் புகட்டுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம். இதன்பிறகும் தாய்ப்பால் குறைவாக இருந்தால், மருத்துவரை அணுகுங்கள். பால் சுரப்பிற்குத் தேவையான மருந்துகளை அவர் பரிந்துரைப்பார்.

எனக்கு மூன்று பெண் குழந்தைகள். எங்கள் வீட்டில் பூனை வளர்க்கிறோம். குழந்தைகள் பூனையிடம் பாசமாக இருப்பார்கள். என் குழந்தைகள் சாப்பிடும் தட்டில் பூனையும் சாப்பிடும். இதனால், குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா வரும் என்று பயமுறுத்துகிறார்கள். இது உண்மையா?
பாக்ய லட்சுமி, மயிலாடுதுறை.
குழந்தைகள் சாப்பிடும் தட்டில் பூனை சாப்பிடுவதால் ஆஸ்துமா வரும் என்று கூற முடியாது. ஆனால், வளர்ப்புப் பிராணிகள் வீட்டில் இருந்தாலே ஒரு சிலருக்கு ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். செல்லப்பிராணிகளுக்கு தனியாக உணவளித்துப் பழக்குங்கள். நம்முடைய தட்டில் அவற்றைச் சாப்பிட ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம். பூனைகளின் வாயில் பலவிதமான நோய்க்கிருமிகள் இருக்கும். இதனால் குழந்தைகளுக்குக் கண்டிப்பாக பிரச்னைகள் ஏற்படும். இதுகுறித்து உங்கள் செல்லப்பிராணி மருத்துவரிடமும் அறிவுரை கோருங்கள். அவர் மேலும் விவரங்கள் கூறுவார்.

எனக்கு 27 வயது ஆகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. மாதவிலக்கு இருபத்தேழு நாட்களுக்கு ஒருமுறை மிகச் சரியாக வருகிறது. ஆனால், இரண்டு நாட்கள் மட்டுமே உதிரப் போக்கு உள்ளது. சில மாதங்களில் கடுமையான வயிற்று வலி உள்ளது. இதனால் வரும் காலத்தில் ஏதும் பிரச்னை ஏற்படுமா?
ஆர்.அபிராமி, முசிறி.
கவலை வேண்டாம் அபிராமி! இரண்டு நாள்கள் மட்டுமே உதிரப்போக்கு இருப்பது குறித்து அச்சப்படத் தேவையில்லை. மாதவிடாய் நேரத்தில் லேசான வயிற்று வலி இருப்பது இயற்கையே! ஆனால் அந்த வயிற்று வலியால் உங்களுடைய அன்றாட அலுவல்கள் தடைபடும் என்றால் தாங்கள் மருத்துவ ஆலோசனை அவசியம் பெற வேண்டும். சரிவிகித உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியைக் கடைப்பிடியுங்கள். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில் தற்சமயம் பயம் ஏதுமில்லை.

காலையில் தூங்கி எழுந்ததும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறது. காரம் அதிகம் சாப்பிட்டால் இப்படி இருக்குமா?
பவித்ரா, திருவள்ளூர்.
காலையில் எழுந்ததும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்பட்டால் நீங்கள் அதற்கு முந்தைய நாள் போதுமான தண்ணீர் குடிக்காமல் இருந்திருக்கலாம். சிறுநீர் பாதை நோய்தொற்று இருந்தாலும் இந்த அறிகுறி ஏற்படலாம். நிறைய தண்ணீர் பருகுங்கள். அருகில் இருக்கும் மருத்துவரை அணுகி சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உணவில் காரம் சேர்ப்பதற்கும் சிறுநீர் எரிச்சலுக்கும் சம்பந்தம் இல்லை.

மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். அடிக்கடி வாந்தி வருவதால் சோர்வு ஏற்பட்டு பகலில் தூங்கிவிடுகிறேன். இரவில் தூக்கம் வருவதில்லை. குழந்தை பிறக்கும்வரை இவ்வாறு வாந்தி வருமா? இதனால் குழந்தைக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா?
ராஜேஸ்வரி, விழுப்புரம்
கர்ப்பகாலத்தில் வாந்தி ஏற்படுவது இயற்கையே! ஆனால் சோர்வு ஏற்படும் வகையில் அடிக்கடி வாந்தி ஏற்பட்டால் அது தங்களுக்கும் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லதல்ல. பொதுவாக மூன்று மாதங்கள் வரை வாந்தி இருக்கலாம். அதிகமான வாந்தி இருந்தால் மாத்திரைகள் உட்கொண்டு வாந்தியைக் கட்டுப்படுத்தலாம். உடலில் நீரின் அளவைச் சரியான நிலையில் வைத்திருந்த தங்களுக்கு சோர்வு ஏற்படாது. குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படாது. நீராகாரங்கள் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள். எளிதில் செரிக்கக்கூடிய உணவுப்பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பழங்கள் நிறைய சாப்பிடுங்கள். மனச்சோர்வு நீக்குங்கள்! விரைவில் குணம் பெற வாழ்த்துகள்!
தொகுப்பு: ரவி வர்மன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com