டாக்டரைக் கேளுங்கள்: வாசகர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் டாக்டர் எழிலரசி  பிரசன்னா

குழந்தை பிறந்தபின் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தழும்புகள் மறைய லேசர் அறுவை சிகிச்சை முறை உள்ளதா?
டாக்டரைக் கேளுங்கள்: வாசகர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் டாக்டர் எழிலரசி  பிரசன்னா

மேடம், எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. மாதவிடாய் மிகச் சரியாக வருகின்றது. ஆனால், மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலியால் அவதிப்படுகிறேன். மருத்துவரிடம் ஆலோசனை செய்ததில் சினைப்பையில் ரத்த கட்டிகள் இருப்பதாகக் கூறினார். இது பற்றி கூற முடியுமா?
-பர்வின் பானு, காஞ்சிபுரம்.
நீங்கள் கூறுவதைப் பார்க்கும்போது நீங்கள் என்போமெட்ரியோசிஸ் எனப்படும் பெண் உறுப்பு சம்பந்தப்பட்ட நோயால் அவதிப்படுவதுபோல் தெரிகிறது. இந் நோய் சினைப் பையை சிதைத்துவிடும் அபாயம் நிறைந்தது. தகுந்த சிகிச்சை முறைகளைத் தக்க சமயத்தில் மேற்கொள்ளாவிட்டால் குழந்தையின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாங்கள் கூடிய சீக்கிரமே, தக்க மருத்துவ ஆலோசனை பெற்று குழந்தைப் பேறு அடைவதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவும். அந்தத் தாய்மை நிலையும்கூட நோயைக் கட்டுப்படுத்தும்.

குழந்தை பிறந்தபின் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தழும்புகள் மறைய லேசர் அறுவை சிகிச்சை முறை உள்ளதா? இதனால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படுமா?
- ரம்யா, மயிலாடுதுறை.
குழந்தை பிறந்தபின் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தழும்புகள் மறைய லேசர்அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும் இது போன்ற முறைகள் முழு நிவாரணம் அளிக்காது. மேலும் பண விரயம் அதிகமாவது மட்டுமல்லாமல் அதிக நாட்கள் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிகிச்சையின் போது அரிப்பு, வீக்கம், சிவந்து போதல் முதலான பக்க விளைவுகள் ஏற்படலாம். குழந்தை பிறந்தபின் ஏற்படும் சுருக்கங்கள் வராமல் தவிர்க்க தேங்காய் எண்ணெய், சோற்றுக் கற்றாழை உள்ள களிம்புகளை கருவுற்ற இரண்டு மாதம் முதல் வயிற்றில் தடவி வரலாம்.

தாய்மை அடைந்த பின்னர் பின்பற்ற வேண்டிய பொதுவான வழிமுறைகள் பற்றிக் கூறுங்கள் மேடம்?
-ரஞ்சிதா, கும்பகோணம்.
தாய்மை அடைய நினைக்கும் ஒவ்வொருவரும் அந்த தாய்மை நிலையை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்க வேண்டும். தாய்மை என்பது பெண்களின் ஒரு நிலையே தவிர இது நோய் அல்ல. எனவே மருத்துவரின் அறிவுறுத்தல் இருந்தாலன்றி பெண்கள் எப்போதும் போல் தத்தம் பணிகளைச் செவ்வனே செய்யலாம். சீரான உணவு நல்ல உறக்கம், அமைதியான சூழல், மகிழ்ச்சியான மனநிலை இவை யாவும் மிகவும் அவசியமாகும். சிறுநீர்ப் பரிசோதனையில் (Pregcard test) கருவுற்று இருப்பது தெரிந்தவுடன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

எனது மகளுக்கு 16 வயது ஆகிறது. மாதவிடாய் சுழற்சி சரியாக வருவதில்லை. எடை கூடிக்கொண்டே இருக்கிறது. மருத்துவர் சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதாக கூறியுள்ளார். இதனைச் சற்று விளக்குங்களேன்..?
வாசகி, எண்ணூர்.
நீங்கள் கூறியிருப்பது "பாலிசிஸ்டிக் ஓவரீஸ்' எனப்படும் சினைப்பை சம்பந்தப்பட்ட நோய்க்கான அறிகுறியாகும். பதின்ம வயது சிறுமியர்க்கு இப்பிரச்னை தற்போது பரவலாகி வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் போதுமான உடற்பயிற்சி இல்லாமயே ஆகும். ஒரு பக்கம் ஆரோக்கியமற்ற துரித உணவு வகைகள்; மறுபக்கம் உடற்பயிற்சி இல்லாத வாழ்வுமுறை இரண்டும் சேர்ந்து உடல் எடை இவர்களுக்குக் கூடி வருகின்றது. இதைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால் குழந்தையின்மை கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல், வருமுன் காப்பதே நன்று. துரித உணவுகளைத் தவிர்த்து உடல்நலத்தில் கவனம் செலுத்துவதின் மூலம் இந்நோய் வருவதை தவிர்க்கலாம். நீங்கள் அருகில் இருக்கும் மகளிர் சிறப்பு மருத்துவரை ஆலோசித்து அவருடைய அறிவுரையை கடைப்பிடியுங்கள். உடற்பயிற்சியின் மூலம் எடை குறைப்பது மிகவும் அவசியம்.

டாக்டர், வெள்ளைப்படுதல் இருந்தால், உடல் இளைக்குமா? வெள்ளைப்படுதலுக்கு என்ன காரணங்கள் என்று கூறமுடியுமா?
பார்வதி, பெரம்பலூர்.
நோய் சாரா, லேசான வெள்ளைப்படுதல் இயற்கையானதே. எல்லா வெள்ளைப் படுதலும் உடல் இளைப்பு ஏற்படுத்தாது. பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, பிறப்புறுப்பு வீங்குதல் போன்றவை நீங்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான அறிகுறிகள். வெள்ளைப்படுதலுடன் அவ்வப்போது இரத்த அறிகுறி இருந்தாலும் நீங்கள் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். சிலவகையான கிருமி தொற்றுகளினாலும் கருப்பை வாய்ப் புற்று நோயின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். இரத்த சோகை, சர்க்கரை நோய் போன்ற காரணங்களினாலும் வெள்ளைப்படுதல் இருக்கலாம். 21-29 வயதுவரை உள்ள பெண்கள் இதற்கான பரிசோதனையை மூன்று வருடங்களுக்கு ஒரு முறையும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் Pap Smear அனைவரும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை Pap Smear பரிசோதனையும் 5 வருடங்களுக்கு ஒரு முறை HPV test செய்து கொள்வதும் அவசியமாகும்.

என்னுடைய அம்மாவிற்கு வயது 45. மாதவிடாய் மாதம் இருமுறை வருவது மட்டு மல்லாமல் உதிரப்போக்கும் அதிகமாகி இருக்கிறது. இது மெனோபாஸுக்கான அறிகுறியா... மருத்துவரை ஆலோசிக்க வேண்டுமா?
-வாசகி, கிருஷ்ணகிரி.
தங்கள் தாயாருக்கு 45 வயது எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே, இது மெனோபாஸுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இருப்பினும் கருப்பை கட்டிகள், கருப்பை உள்சுவர் தடிமனாதல் (உய்க்ர்ம்ர்ற்ழ்ஸ்ரீஹ ற்ட்ண்ஸ்ரீந்ங்ய்ண்ய்ஞ்) போன்ற பிரச்னைகளாலும் அதிகமான உதிரப்போக்கு ஏற்படலாம். எனவே நீங்கள் உங்கள் தாயாரை அருகிலிருக்கும் மகளிர் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற உதவுங்கள். மருத்துவர் உங்கள் தாயாருக்கு, கருப்பை மற்றும் கருப்பை வாய் உள்பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் போன்ற பரிசோதனைகள் செய்து தகுந்த சிகிச்சை அளிப்பார்.
(பதில்கள் தொடரும்)
தொகுப்பு: ரவிவர்மன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com