சமையல்... சமையல்... சமையல்...!

பிரண்டை துவையல், அக்கி ரொட்டி, மாங்காய் சாதம், நீர் தோசை, ரவா தோசை

பிரண்டை துவையல்

தேவையானவை: 
இளசானப் பிரண்டை கட்டைவிரல் நீளம் -  10 துண்டுகள் 
தேங்காய்பத்தை - 4 துண்டு 
மிளகாய் வற்றல் -4
கடுகு - அரை தேக்கரண்டி 
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி 
எள்ளு  - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
வெல்லம் - 1 சிறு துண்டு
புளி - 1 சிறு எலுமிச்சை அளவு 
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு பிரண்டையை சுருள வதக்கவும். பிறகு  தேங்காய் தவிர மற்ற பொருள்களை மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு தனியாக வறுக்கவும். வறுத்த எல்லாவற்றுடன் பிரண்டை ,
உப்பு, புளி, தேங்காய், வெல்லம்  வைத்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். பிரண்டைத் துவையல் தயார். இதை சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம், தொட்டுக் கொள்ளவும் செய்யலாம். மூட்டு வலிக்கு ஒரு நல்ல மருந்தாகவும் ஆகும்.

அக்கி ரொட்டி

தேவையானவை:
அரிசி மாவு - 1 கிண்ணம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி - ஒரு கொத்து
கேரட் துருவல் - 1 கிண்ணம்
செய்முறை: பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்துமல்லி, கேரட் துருவல் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு போடவும். நன்றாக எல்லாவற்றையும் கலக்கவும். தண்ணீர் சிறிது சிறிதாக விட்டு கெட்டியாக பிசையவும். வாழை இலை இருந்தால், அதனை தோசை கல்லின் அளவுக்கு  கட் செய்து இரண்டு வைத்துக் கொள்ளவும். அதன் பின்புறம் எண்ணெய் தடவி ஓரு உருண்டை மாவைத் மெதுவாக தட்டவும். இப்போது தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து சூடானபின் சூட்டைக் குறைக்கவும். வாழை இலையில் உள்ள மாவோடு தோசைக் கல்லின் மீது மாவை மெதுவாக தட்டிவிட்டு இலையை எடுத்துவிடவும். மிதமான சூட்டில் வேகட்டும். சுற்றி எண்ணெய் விட்டு சிவந்ததும் திருப்பிப் போடவும். சுவையான அக்கிமாவு ரொட்டி தயார். இதற்கு தேங்காய்ச் சட்னி சுவையான பொருத்தமாக இருக்கும். 

மாங்காய் சாதம்

தேவையானவை:
பச்சரிசி - 1கிண்ணம்
மாங்காய் - 1 பெரியது
தேங்காய்த் துருவல் - சிறிது
பச்சைமிளகாய் - 2
எண்ணெய் - 5 தேக்கரண்டி
கடுகு- உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
நிலக்கடலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:  முதலில் பச்சரிசியை உதிரி உதிரியாக வடித்து எடுத்து அகலமானப் பாத்திரத்தில் வைக்கவும். மாங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும். கொஞ்சம் தேங்காய்த் துருவல்,  பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.  வாணலியில், எண்ணெய்விட்டு காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நிலக்கடலை, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் என ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டுத் தாளிக்கவும். பொன்னிறமானதும், அதில் உப்பு, அரைத்த மாங்காய் துருவல், மஞ்சள் பொடி சிட்டிகை சேர்த்து நன்றாக கிளறி இறக்கிவிடவும்.  பிறகு வடித்து ஆற வைத்த சாதத்தில் தேவையான அளவு வதக்கிய மாங்காய் துருவலைப் போட்டு கிளறவும். சுவையான மாங்காய் சாதம் தயார்.  இதற்கு வடாம், அப்பளம் பொரித்து அல்லது சட்னி செய்தும் சாப்பிடலாம். 

நீர் தோசை

தேவையானவை:
பச்சரிசி - 1 கிண்ணம்
எண்ணெய்- தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: பச்சரிசியை 3 டம்ளர் தண்ணீரில் 4 மணிநேரம் ஊறவிடவும். பிறகு தண்ணீரை இறுத்து வைத்துக் கொள்ளவும். அதில் கால் பாகம் நீரை அரிசியுடன் சேர்த்து கிரைண்டரில் நைஸôக அரைத்து எடுக்கவும். இப்போது மீதமுள்ள தண்ணீரை மாவுடன் சேர்த்து, உப்பு போட்டு நீராக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் இரும்பு தோசைக் கல்லில் மிதத்துக்கு மேல் சுடவைத்து மாவைக் கலந்து ஒரு கரண்டி ஊற்றவும். சுற்றி எண்ணெய்விட்டு மேலே மூடவும் ஒரு நிமிடம். ஓரமாக எடுத்து மடிக்கவும். ஒவ்வொரு முறையும் தோசை வார்க்க மாவை கலக்கவும்,இல்லையேல் மாவு அடியில் படியும். நீர் தோசை தயார். இட்லி மிளகாய்ப்பொடி, சட்னியுடன் சாப்பிடலாம். 

ரவா தோசை

தேவையானவை: 
ரவை - 1 கிண்ணம்
தயிர் - அரை கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
சர்க்கரை - 1 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
சமையல் சோடா - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரவையுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் கெட்டி மாவில் தேவையான தண்ணீர் சேர்த்து கலக்கவும். அத்துடன்  உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின்பு சீரகம் தட்டி போடவும், பின்பு சமையல் சோடா போட்டு நன்றாக கலந்து, பின்னர் தோசை வார்க்கவும். நெய் அல்லது எண்ணெய்விட்டு முறுகலாக சுட்டு எடுக்கவும். திருப்பிப் போட வேண்டாம்.  முறுகலான ரவா தோசை தயார்.

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை:
வாழைக்காய் - 1
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காய்த் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - 1 சிறு துண்டு
எலுமிச்சைச்சாறு - 1தேக்கரண்டி
செய்முறை: முற்றிய வாழைக்காயை காம்பு நறுக்கி விட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு  ரொம்ப மசியாமல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சூடு ஆறியதும் தோலை உரித்து காய்த் துருவியில் உதிரியாக வருமாறு வாழைக்காயைத் துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சுடவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, பொன்னிறமானதும் பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து துருவிய வாழைக்காயைப் போட்டு பிரட்டி, கிளறி இறக்கவும். பின்பு எலுமிச்சைச்சாறு கலந்து இறக்கவும். சுவையான வாழைக்காய் பொடிமாஸ் தயார்.

இந்தவார சமையல் குறிப்புகளை வழங்குபவர் ராதா சுதர்ஸன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com