• சப்பாத்திகளைச் சூட்டோடு போட்டு மூடி வைத்தால் நீர் கோத்துக் கொண்டுவிடும். அதனால் சப்பாத்திகளை சுத்தமான துணியால் சுற்றி பிறகு ஹாட்பேக்கில் மூடி வைக்கவும்.
• சிறிது பழைய சாதத்தை அரைத்து அதை தோசை மாவுடன் கலந்து வார்த்தால், ஹோட்டலில் உள்ளது போன்று பேப்பர் ரோஸ்ட் சூப்பராக வரும்.
• பொன்னிறமாக வெங்காயத்தை வதக்க அதிக எண்ணெய் சேர்க்க வேண்டியதில்லை. சிறிதளவு எண்ணெய்யில் வதக்கிவிட்டு, அத்துடன் தக்காளிச்சாறு சேர்த்து வதக்கினால் நிறமும் அழகாக இருக்கும். சுவையும் சத்தும் கூடும்.
• தக்காளி சூப் கெட்டியாக இருப்பதற்கு ஒரு வெந்த உருளைக் கிழங்கை அதில் உதிர்த்துவிட்டு கொதிக்க விட வேண்டும்.
• தக்காளி சூப்பில் சிறிது பீட்ரூட்டை சேர்த்தால் நிறமும், சுவையும், சத்தும் கூடும்.
• சப்பாத்தி செய்யும்போது கால்பங்கு சோயா மாவு சேர்த்துப் பிசையவும். சப்பாத்தியின் சுவைக் கூடும். புரதச் சத்தும் பன்மடங்காகக் கிடைக்கும்.
• குருமா செய்யும்போது சிறிது இஞ்சி, ஓமம் சேர்த்துக் கொண்டால் சுவையும் கூடும். ஜீரணத்துக்கு நல்லது.
• பொரித்த வடாம் மீது சாட் மசாலாத் தூள் தூவி சாப்பிட்டால் டேஸ்ட்டாக இருக்கும்.
- அமுதா அசோக்ராஜா
• இலுப்பைப் பூவை நீரிலிட்டு காய்ச்சி குடித்து வர காய்ச்சல், பித்தம் தீரும்.
• வாழைப்பூவை சமைத்து உண்ண சூடு நீங்கும்.
• வேப்பம்பூவை துவையலாக்கி சாப்பிட வயிற்றுக் கோளாறு நீங்கும்.
"மலர்களின் மகத்துவம் 1000 தகவல்கள்' என்ற நூலிலிருந்து.
- நெ.இராமன்
• ஒரு டம்ளர் வெள்ளரிச் சாறுடன், மோரும் கலந்து சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டால் வெயிலால் ஏற்படும் தாகம் தணியும். பரு, கட்டி, வேனல் மேல் வெள்ளரி பிஞ்சை அரைத்துப் பற்றுப் போட்டால் குணமாகும்.
• ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை மூக்கில் வைத்து முகரலாம். விரைவில் ஜலதோஷம் குணமாகும்.
• வெங்காயப் பசையை தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குறையும்.
• பார்லி கஞ்சியை வடிகட்டி தேன் கலந்து சாப்பிட சளி, இருமல், நுரையீரல் நோய்கள் குறையும்.
• சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனை சாப்பிட அல்சர் குறையும்.
• மாதுளைப் பழச் சாறோடு, தேன் கலந்து காலை ஆகாரத்திற்கு பின் சாப்பிட்டு வர, புதிய ரத்தம் உற்பத்தி ஆகும். மலச்சிக்கல் நீங்கும். உடல் பலம் பெறும்.
• நெய் சாப்பிட்டு வர பார்வை பிரகாசம் ஆகும். தோல் நோய்கள், மாலைக்கண் நோய்களை தடுக்கும். எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடல் சூட்டைத் தணிக்கும் பித்தம், கபத்தைப் போக்கும். காரத்தின் கடுமையைக் குறைக்கும். உடம்பை பளபளப்பாக்கும்.
("பல்துறை தகவல்கள் 1000' என்னும் நூலிலிருந்து.
- முக்கிமலை நஞ்சன்
• வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.
• வெங்காயச் சாறு கொண்டு வாய் கொப்பளித்தால் பல்வலி, ஈறுவலி குணமாகும்.
• வெங்காயத்தை பாதியாக நறுக்கி அழுந்த தேய்த்து வந்தால் முகப்பரு மறையும்.
• வெங்காயத்தை சூப் செய்து காப்பி, டீக்குப் பதிலாக குடித்து வர இரத்தம் சுத்தமாகும்.
• வெங்காயத்தை அரைத்து உள்ளங்காலில் வைத்துக் கட்ட இரவில் நிம்மதியாக உறக்கம் வரும்.
- நெ. இராமன்
• சப்போட்டா பழத்தை ஒருநாளைக்கு ஒன்றிரண்டு பழங்கள் உண்டு வந்தால் பித்த மயக்கம் தீரும், காய்ச்சல் தணியும், உடல் வெப்பம் குறையும். தூக்கமின்மை நோய்க்கு நல்ல மருந்து.
• கொன்றைப்பூவை எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து உடலெங்கும் பூசி சிறிது நேரம் கழித்து சீயக்காய் அல்லது கடலைமாவு போட்டு தேய்த்து குளித்து வர கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் விலகி மேனி பொன்போன்று ஜொலிக்கும்.
• கஸ்தூரி மஞ்சள், வேப்பம் விதை, கடுக்காய் இவைகளை சமமாக எடுத்துச் சிறிது சந்தனத்தூள் கலந்து தண்ணீர்விட்டு குழம்பு போன்று அரைத்து சொறி சிரங்குகளுக்கு மேல் தடவ விரைவில் குணமாகும்.
"மூலிகைகளின் சொர்க்கம்' என்ற நூலிலிருந்து.
- வெ.அனகா