"புகுந்த வீடு', "அழகி', "பொம்மலாட்டம்', "பொன்னுஞ்சல்', "ரோமாபுரி பாண்டியன்', "தேவதை' போன்ற தொடர்களில் நடித்தவர் மீனாட்சி. தற்போது இவர், புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "ருசிக்கலாம் வாங்க' நிகழ்ச்சியையும், விஜய் தொலைக்காட்சியில் "நீலி' தொடரிலும் நடித்து வருகிறார்.
இவரை சந்தித்தோம்:
"மதுரை தபால்தந்தி நகர்தான் எனது பூர்வீகம். பி.பி.ஏ படித்திருக்கிறேன். டிவி சேனலில் புரோகிராம் புரொடியூசராக பல நிகழ்ச்சிகள் செய்து வந்தேன். ஒரு நாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டிய தொகுப்பாளினி வராமல் போக, அந்த நெருக்கடியைச் சமாளிக்க நானே தொகுத்து வழங்கினேன். அதன் மூலம் வீ.ஜே. வாய்ப்பு தேடி வந்தது.
மெகா டிவியில் "பெண்கள்.காம்' ஷோ மூலமாக வி.ஜே ஆனேன். அதன்பிறகு கேப்டன் டிவியில் பெண்கள் நிகழ்ச்சி, ஜெயா டிவியில் ஸ்டார்ஸ் பேட்டி என கடந்த ஆறு ஆண்டுகளாக வி.ஜே.வாக இருக்கிறேன். ஜெயா டிவியில் ஒளிப்பரப்பான "பாட வா உன் பாடலை', "மனதோடு மனோ' போன்ற நிகழ்ச்சிகளுக்கு துணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறேன்.
இந்நிலையில்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்து தொடர்களிலும் நடித்து வருகிறேன்.
"கோடிட்ட இடத்தை நிரப்புக' படத்தின் மூலம் பெரியதிரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரியதிரையிலும் கிடைக்கின்ற நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறேன்.
இதற்கிடையில் வின் மீடியா என்ற விளம்பர படம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றையும் அம்மாவின் உதவியுடன் நடத்திவருகிறேன். அதன்மூலம் கல்லூரிகள், நாமக்கல் டிரான்ஸ்போர்ட், மை டிவிஎஸ் போன்றவற்றிற்கு டாக்குமென்டரி படங்களும் இயக்கியிருக்கிறேன்.
ஸ்டெல்லா, கீதா என இரு குருவிடம் முறையாக கிளாசிக்கல் டான்ஸýம் கற்றிருக்கிறேன். டான்ஸ் எவ்வளவு பிடிக்குமோ அந்தளவிற்கு ராஜா சார் பாட்டும் பிடிக்கும். எப்பவும் துறுதுறுவென எதையாவது செய்து கொண்டிருக்கிற போல்டான பொண்ணு நான். வரும் காலத்தில் பெரியதிரையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும், நல்ல நல்ல படங்களை இயக்கவும் வேண்டும் என்பது என் கனவு'' என்றார்.
- ரிஷி