*சூடான பாலில் அரிசி அவலை ஊறப்போட்டு, வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், மலை வாழைப்பழத் துண்டுகளைச் சேர்த்தால் பால் அவல் தயார்.
*பச்சைச் சுண்டக்காயை சிறிது பிளந்து உப்பு, மோர் சேர்த்து நன்கு வெயிலில் காய வைத்து, தேவைப்படும்போது எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம்.
*முள்ளங்கி இலையை எண்ணெய் விட்டு வதக்கி, மிளகாய் வற்றல் உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து அரைத்தால் சுவையான துவையல் கிடைக்கும்.
*எலுமிச்சம் பழங்களைக் கொதிக்கும் நீரில் போட்டு ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கி, 10 நிமிடம் மூடி வைத்த பின் நறுக்கி ஊறுகாய் போட்டால் மறுநாளே பயன்படுத்தலாம், தோலில் கசப்பு இருக்காது.
*அவல் சேமியா, ஜவ்வரிசி சேமியா பால் பாயசத்தை இறக்கும்போது 2 சிட்டிகை ஜாதிக்காய் துருவலைச் சேர்த்தால் மணமாக இருக்கும்.
*பாயாசம் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு தேக்கரண்டி வேக வைத்த பயத்தம் பருப்பைச் சேர்த்துவிட்டால் சுவை நன்றாக இருக்கும்.
*எலுமிச்சைச் சாதம் செய்யும்போது இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்து வதக்கி பின் சாதத்தில் போட்டுக்
கிளறினால் சுவையாக இருக்கும்.
*மிளகாயைக் கீறி சிறிது எண்ணெயில் வறுத்துவிட்டு பஜ்ஜி செய்தால் சுவையாகவும், காரம் சீராகவும்
இருக்கும்.
*உருளைக்கிழங்கு காரக் கறி செய்யும்போது அரைக் கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் சுவையாக இருக்கும்.
*மோர்க்குழம்புக்கு மசாலா அரைக்கும்போது தேங்காயைக் குறைத்துக் கொண்டு கசகசா, கடுகு போட்டு அரைத்துக் கலக்கினால் வாசனையாக இருக்கும்.
*வற்றல் குழம்பு செய்து இறக்கும்போது ஒரு தேக்கரண்டி எள்ளுப் பொடியைச் சேர்த்தால் நல்லெண்ணெய் வாசனையுடன் அருமையாக இருக்கும்.
*கேசரி கிண்டும்போது இரண்டு பேரீச்சம் பழத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால் சுவை கூடும்.