எதிர்பார்த்தது மாதிரியே நடந்திருக்கிறது. இந்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் இறகுப் பந்தாட்ட வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு பத்ம பூஷண் விருது வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. சிந்துவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது 2015-இல். இருபது வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் சிந்து மட்டுமே..!
சிந்துவுக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட வேண்டுமானால் அதற்கான விதி தளர்த்தப்பட வேண்டும். விதிகளின் படி, பத்மஸ்ரீ விருது கிடைத்து நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் பத்ம பூஷண் விருது வழங்குவதற்கு பெயர் பரிந்துரைக்கப்பட்ட வேண்டும். ஆனால், சிந்துவிற்கோ பத்மஸ்ரீ விருது கிடைத்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகியுள்ளன. குறைந்தது இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால், சிந்துவின் அபார திறமையை அங்கீகரிக்க இந்த விதியைத் தளர்த்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டு வீரரும், இந்திய விளையாட்டு அமைச்சராகவும் இருக்கும் ராஜவர்தன் சிங் ரத்தோட் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது என்று விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
பத்மஸ்ரீ விருது கிடைத்த இரண்டு ஆண்டுகளில் பத்ம பூஷண் விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறித்து சிந்து என்ன கூறுகிறார்?
"செய்திகள் மூலமாகத் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு எனது நன்றிகள். பரிந்துரையை மத்திய அரசு ஏற்க வேண்டுமே ... விருதுகள் வழங்கப்படுவதில் கால இடைவெளி குறித்து எனக்கு தெரியாது. அதனை விருது குழு தீர்மானிக்கும். அதனால், நான் அதைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. அடுத்து நான் டென்மார்க், ஃபிரென்ச் தொடர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதனால் பயிற்சியில் மூழ்கியிருக்கிறேன்'' என்றார்.
- பனிமலர்