சீனாவில் விசாரணை கைதி ஒருவர் நீதிமன்றத்திற்குள் விசாரணைக்காக சென்றிருந்த நிலையில் வெளியில் இருந்த அவரது குழந்தை பசியில் அழுததால் பெண் காவல் அதிகாரி அக்குழந்தைக்கு பாலூட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
மத்திய சீனாவில் உள்ள சாங்ஷி சின்சோங் பகுதியில் நீதிமன்றம் உள்ளது. பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முறைகேடாக கையாடல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது தனது பச்சிளம் குழந்தையை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹோலினா என்ற பெண் அதிகாரியிடம் ஒப்படைத்துச் சென்றார்.
விசாரணை நடை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அவரது பச்சிளம் குழந்தை அழத் தொடங்கியது. ஹோலினா உள்பட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகள் எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனையடுத்து ஹோலினா விசாரணை பெண்ணிடம் அனுமதி பெற்று குழந்தையை மடியில் போட்டு தாய்ப்பாலைப் புகட்டத் தொடங்கினார். பெண் காவல் அதிகாரியின் இச்செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஹோலினா கூறுகையில், "நானும் சிறிது காலத்திற்கு முன்னர்தான் தாய்மை அடைந்தேன். ஒரு குழந்தை பசியால் அழுகிறதென்றால் அக்குழந்தையின் தாய்க்கு ஏற்படும் வலியை என்னால் உணர முடியும்'' என்றார்.
- விசாலாட்சி