மராத்திய நூலான "லீலாவதி'யில்தான் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் பற்றிய குறிப்பு முதன்முதலில் கி.பி.1250- இல் கூறப்பட்டுள்ளது.
காசியில் தங்கத்தாலான காலபைரவர் உற்சவர் விக்ரகம் உள்ளது. தீபாவளி நாளான்று மட்டுமே இந்த உற்சவர் பவனி வருகிறார்.
ஸ்ரீரங்கத்தில் பெருமாள் தீபாவளி கொண்டாடுகிறார். அன்றைய தினம் பெருமாளுக்கு எண்ணெய்க்காப்பிட்டு திருமஞ்சனம் செய்விப்பார்கள். அப்போது எண்ணெய்யும், சீகைக்காயும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
வடமாநிலங்களில் தீபாவளியன்று லட்சுமி வீட்டில் தங்குவதாக ஐதீகம். அமாவாசையன்று பூஜையறையில் 24 மணி நேரமும் ஒரு விளக்கு எரியும். இந்த விளக்கிலிருந்து எடுக்கப்படும் மையைத்தான் கண் மையாக ஆண்டு முழுவதும் உபயோகிப்பார்கள். இதை "மோனி தீபாவளி' என்கிறார்கள்.
குபேரன் சிவனை வழிபட்டு தீபாவளி அன்றுதான் பொக்கிஷங்களைப் பெற்றார். இந்த பூஜை கீவளூர் கேடிலியப்பர் ஆலயத்தில் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. எனவே இக்கோயிலில் தீபாவளியன்று பலவித பட்சணங்களுடன் குபேர பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி அன்று அன்னபூரணிக்கு தங்கக் குத்துவிளக்கு ஏற்றுவார்கள். அப்போது ஈசுவரனுக்கு தங்கக்கரண்டியில் அன்னை அன்னம் வழங்கும் வைபவம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும். தீபாவளிக்கு முன்வரும் திரயோதசி அன்று தங்க அன்னபூரணிக்கு பூஜைகள் உண்டு. ஆனால் அன்று திரை போட்டுவிடுவதால் தரிசிக்க இயலாது. மறுநாளான "சோடி தீபாவளி' அன்று தரிசனம் கிடைக்கும். அன்று பொரியுடன் பத்து பைசா நாணயம் பிரசாதமாக அளிக்கப்படும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
- ஆர்.மகாதேவன்