பெங்களூரில் சி.எம்.ஆர் சட்டக் கல்லூரியில் படித்து முடித்த சுரபி சந்தோஷ், தமிழில் "ஆயிரத்தில் இருவர்' படத்திலும், மலையாள படமொன்றிலும் நடித்துள்ளார். ஆனால் இவ்விரு படங்களிலும் இவர் நடிப்பதற்கு முன்பே கன்னடத்தில் "துஷ்டா' மற்றும் "ஜடாயு' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மீண்டும் நடிகர் உபேந்திராவின் மனைவி பிரியங்கா தயாரிக்கும் "செகன்ட் ஆஃப்' என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் பிறந்த மலையாளியான இவர், ஆறுவயது முதலே பரதநாட்டியம் கற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஒரு நிகழ்ச்சியின்போது, இவரை சந்தித்த மலையாள திரைப்பட தயாரிப்பாளர் மனைவி ஒருவர், மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். எதிர்பாராதவிதமாக அந்தப்படம் கைவிடப்பட்டது.
சுரபியின் தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தபோது, விருப்ப ஓய்வுபெற்று பெங்களூரில் குடியேறினார். பத்தாண்டுகளாக பெங்களூரில் பெற்றோருடன் தங்கியிருந்த சுரபி, இங்கு பல நாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது, இவரை சந்தித்த இயக்குநர் நாராயண், "துஷ்டா' என்ற கன்னட படத்தில் அறிமுகப்படுத்தினார். அடுத்து ஜடாயுவில் நடித்த பின்னர், தமிழில் "ஆயிரத்தில் இருவர்' மற்றும் மலையாள படமொன்றில் நடித்து முடித்து மீண்டும் கன்னடத்திற்கு திரும்பியுள்ளார்.
நடிகையாக வேண்டுமென்று நான் எப்போதும் திட்டமிட்டதில்லை. எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள விரும்பியே நடித்து வருகிறேன். சட்டம் படித்துள்ள நான் எதிர்காலத்தில் வக்கீலாக பணியாற்ற வேண்டுமென்ற லட்சியமும் உள்ளது'' என்கிறார் சுரபி.
- அ.குமார்