லட்சுமி கடாட்சம் பெருக!
* அதிகாலையில் எழுந்ததும் கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து, அதன்பின் தலைவாசலைத் திறக்க வேண்டும்.
* எழுந்ததும் பசுவின் முகத்தில் விழித்தல் நல்லது.
* செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கில் ஐந்து முகமும் தீபம் ஏற்றலாம்.
* வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும். மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவம் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
* பவுர்ணமியன்று மாலையில் குளித்து, சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர்களால் அர்ச்சித்து பால், பாயசம், கற்கண்டு, பழவகைகள் நைவேத்தியம் செய்து வணங்கிய பின்னரே இரவு உணவு உட்கொள்ள வேண்டும்.
* வைர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்கு சீராக அளிக்கப்பட்ட இந்தப் பாத்திரங்களை துன்பம் வரும் காலத்திலும் விற்கக் கூடாது.
(ஆன்மிகத் தகவல்கள்' நூலிலிருந்து)
- எல்.நஞ்சன்
* கன்னிப் பெண்கள் சாந்துப் பொட்டும், சுமங்கலிப் பெண்கள் குங்குமப் பொட்டும், கர்ப்பிணிப் பெண்கள் விபூதியுடன் குங்குமப் பொட்டும், விதவைப் பெண்கள் விபூதியும் அணிய வேண்டும்.
நாஞ்சில் ஸ்ரீ விஷ்ணு எழுதிய "தெரிந்ததும் தெரியாததும்' நூலிலிருந்து.
- எம்.ஏ.நிவேதா
அம்புபோடும் விஜயா நேரம்
லலிதா சஹஸ்ரநாமம் பாடல்களில் அம்பிகையை "விஜயா' என்றும் போற்றி சொல்லப்படுகிறது. விஜயதசமியன்று மாலை வேளையில் நட்சத்திரங்கள் தோன்றும் நேரம் "விஜயா' என்று அழைக்கப்படுகிறது. அந்த சுப வேளையில் தொடங்கப்படும் சுப காரியங்கள் வெற்றி பெறும் என்று முகூர்த்த சிந்தாமணி நூல் கூறுகிறது. அந்த நேரத்தில்தான் விஜய தசமி அன்று அம்புபோடும் நிகழ்ச்சி நடை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பர் வழிபட்ட சரஸ்வதி கோவில்!
குமரி மாவட்டத்திலுள்ள புராதன பத்மநாபபுரம் தலத்தில் பழமை வாய்ந்த சரஸ்வதி கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் கம்பர், சரஸ்வதி தேவியை வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. இங்கு நவராத்திரி பூஜை இன்றும் பிரிசித்தம். தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கென்று உள்ள ஆபூர்வ தனிக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
- உ.ராமநாதன்
யோசனை!
விருந்துண்ட பிறகு வயிறு வலித்தால் ஒரு வெற்றிலையில் நான்கு ஓமமும் இரண்டு உப்புக்கல்லும் சேர்த்து சுருட்டி மெதுவாகச் சுவைத்து சாற்றை விழுங்குங்கள். வயிற்றுவலி ஐந்தே நிமிடத்தில் பறந்துவிடும்.
- கே.அஞ்சம்மாள்.
காலையில் வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
- கே.பிராபாவதி
கடைகளில் கிடைக்கும் கூட்டு பெருங்காயத்தைவிட, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பால்காயம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்.
- எம்.அசோக்ராஜா
சாம்பாருக்குப் போட காய்கறி இல்லையென்றால், பருப்பு வேகவைக்கும்போது அதில் ஒரு பிடி பச்சை வேர்க்கடலையையும் போட்டு அதைப் பயன்படுத்தி சாம்பார் செய்தால் ஜோராக இருக்கும்.
- கூ.முத்துலட்சுமி
* வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது, கடைசியில் கடலைமாவு கொஞ்சம் தூவி, சில நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கிளறி இறக்கினால், சுவை நன்றாக இருக்கும்.
* கோவைக்காய் பழுத்துவிட்டால் நறுக்கி, வதக்கி தேவையான உப்பு, புளி, மிளகாய் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து வதக்கி தொக்கு செய்தால், சூப்பர் சுவையில் இருக்கும்.
- மு.சுகாரா