""ஒரு தொழிலதிபராக கல்வியாளராக இந்த பரிசு பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இந்த பெருமையெல்லாம் எனது அப்பாவுக்குத் தான் போய்ச் சேரும். இன்று இங்கிலாந்து பார்லிமெண்ட்டில் விருது பெறும் அளவிற்கு என்னை உருவாக்கியவரும், ஊக்குவித்தவரும் அவர்தான். அவர் கடின உழைப்பாளி. அவரைப் போன்றே என்னையும் உருவாக்கினார். எனது அப்பா சொல்வது போன்று கடின உழைப்புக்கு எப்போதும் மரியாதை உண்டு என்பதை இந்த விருது மூலம் அறிந்து கொண்டேன்.
இதற்கு முன்பு இந்த விழா குறித்த பேனல் டிஸ்கஷனில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், விருது வாங்குவது இதுதான் முதல்முறை.
இந்தியாவில் இருந்து நிறைய தொழிலதிபர்களும், கல்வியாளர்களும், கலைத்துறையைச் சார்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் எல்லாருக்குமே இந்த விழாவில் மரியாதை செய்தது சிறப்புக்குரியது. இதில் மிகுந்த மகிழ்ச்சி அளித்த விஷயம் அங்கு வந்திருந்த நிறைய பேருக்கு என்னை அடையாளம் தெரிந்திருந்ததுதான். அங்கு வந்திருந்த எத்தனையோ பேரில் தமிழ்நாட்டில் இருந்து சென்றிருந்த என்னுடைய கருத்துகளையும், உணர்வுகளையும் எடுத்துரைக்க வாய்ப்பளித்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன். என்னைப் போன்ற தொழிலதிபர்களுக்கும், கல்வியாளர்களுக்கு இதுபோன்ற விருதுகள் ஊக்கமளித்து அடுத்தக்கட்டத்திற்கு நிச்சயம் இட்டுச்செல்லும் விதமாக அமைந்திருக்கிறது.
இளம் தலைமுறையினருக்கு உங்களுடைய ஆலோசனை?
நம்பிக்கையின்மை துளியும் இருக்கக் கூடாது. இது என்னால் முடியுமா? என்ற எண்ணம் தோன்றவே கூடாது. அவ்வப்போது நம்மை நாமே மோட்டிவேட் செய்து கொள்ள வேண்டும். சுய ஊக்குவிப்பு, கடின உழைப்பு, எம்பவர்மெண்ட் இது மூன்றும் இருந்தால் மட்டும்தான் வெற்றி இலக்கைத் தொட முடியும். இம்மூன்றுமே எனது தாரக மந்திரம். இதைத்தான் நான் மற்றவர்களுக்கும் சொல்வேன். அதுபோன்று இதற்கு முன் ஜெயித்தவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் வெற்றி இலக்கை அடையலாம்.
இதை அடிப்படையாகக் கொண்டுதான் விளையாட்டு துறையில் ஆர்வமாக இருக்கும் 18 வயதிற்கு கீழுள்ள எங்களது மாணவர்கள் 350 பேருக்கு கல்வி, உணவு, தங்குமிடம் அனைத்தையும் இலவசமாக கொடுத்து வருகிறோம். மேலும், இவர்களுக்கு புரொ கபடி பிரிவில் "தமிழ் தலைவா' எனும் அமைப்பின் மூலம் பயிற்சியளித்து வருகிறோம். தற்போது இவர்களுடன் சேர்ந்து, நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னை புட்பால் கிளப்புடன்
(சென்னையின் எப்.சி.) இணைந்து கையெழுத்திட்டிருக்கிறோம். இதன் மூலம் எங்களது மாணவர்களுக்கு அவர்களது வெற்றியை அடைவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க முடியும் என நம்புகிறேன்'' என்கிறார் ரெஜினா.