இட்லி மாவு கடைசியில் கொஞ்சம் மீந்துவிட்டால், அந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து குழி பணியாரமாக சுட்டு எடுத்தால் மாலைநேர சிற்றுண்டி தயார்.
பாப்கார்ன் நமத்துப் போய்விட்டதா? - பொட்டுக்கடலைக்குப் பதிலாக தேங்காய்ச் சட்னியில் சேர்த்து அரைத்தால், சுவையான சட்னி தயார்.
உடைத்து வைத்த தேங்காய் காய்ந்து போய்விட்டால் அந்த தேங்காய் மூடியில் பாலை ஊற்றி பத்து நிமிடம் வைத்திருந்து பின்பு தேங்காயைப் பயன்படுத்தினால் புதியது போன்று இருக்கும்.
அரைக்கீரை, முளைக்கீரை அதிகமாக வாங்கி மீந்து விட்டால். அவற்றை ஆய்ந்து வெயிலில் காய வைத்து கறிவேப்பிலை பொடி போன்று உப்பு, மிளகு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். மற்ற பொடிகளைப்போன்று நெய்ச் சேர்த்து சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
உப்பு பிஸ்கட் மீந்து விட்டால் பஜ்ஜி தயாரிக்கும்போது பிஸ்கட்டுகளை மாவில் தோய்த்து எண்ணெய்யில் பொரித்தெடுத்தால். உள்ளே மிருதுவாகவும், மேல்புறம் மொறு மொறுவென்றும் பிஸ்கட் பஜ்ஜி பிரமாதமாக இருக்கும்.
தேங்காய்ச் சட்னி மீந்துவிட்டால் புளித்த மோரில் கலந்து கொதிக்கவைத்து, இறக்கி வைத்தால் சுவையான இன்ஸ்டண்ட் மோர்க் குழம்பு ரெடி.
வாழைப்பழங்கள் சாப்பிட முடியாத அளவுக்கு கொழ கொழவென்று கனிந்திருக்கிறதா? அதை பாழாக்க வேண்டாம். தோலை உரித்து பழத்தை கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து இனிப்பு சப்பாத்திகளோ, இனிப்பு பூரிகளோ தயாரிக்கலாம். அல்லது பாலுடன் சேர்த்து மில்க்ஷேக் தயாரிக்கலாம். சுவையானது, சத்தானது.
ரசத்தில் மீந்து போகும் அடிமண்டியை அப்படியே தூக்கிக் கொட்டிவிடுவதுதான் பலருக்கு வழக்கம். அந்த அடிமண்டியை மிக்ஸியில் போட்டு மேலும் கூழாக்கி, அதனுடன் கோதுமை மாவு சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி செய்யலாம். அல்லது சிறிய துண்டுகளாக கட் செய்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கலாம். சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் தயார்.