பேஸ்புக்கில் பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பணம் பறிக்கும் கும்பலின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாக சைபர்கிரைம் போலீசார் கூறியுள்ளனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு
சேலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர். தனது செல்ல மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். சில நாட்களில் என் நம்பர் உங்களுக்கு வேண்டுமா? ஷேர் பண்ணுங்க. கமெண்ட் பண்ணுங்க என அந்த பெண்ணின் புகைப்படம் அந்த பெண்ணின் பேஸ்புக் பக்கத்திலேயே வந்துள்ளது. மேலும் அந்த பெண்ணின் மகள் புகைப்படமும் அந்த பதிவில் இருப்பதை பார்த்து அதிர்ந்து போயுள்ளார்.
அத்துடன் அந்த பெண்ணின் மகள் புகைப்படங்கள் வேறு சில ஆபாச இணையதளங்களிலும் தவறாக சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது. வேதனையின் உச்சத்திற்கே சென்ற அவர் தனது கணவரிடம் விவரத்தை தெரிவித்ததோடு, குறிப்பிட்ட அந்த ஃபேஸ்புக் பக்கத்தினை நிர்வகிப்பவனை மெசெஞ்சர் ஆப் மூலம் தொடர்பு கொண்டு தனது புகைப்படத்தையும் தனது மகளின் புகைப்படத்தையும் நீக்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு குறிப்பிட்ட தொகையை பணமாகக் கொடுத்தால் மட்டுமே புகைப்படங்களை நீக்க முடியும் என பதில் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சேலம் சைபர்கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக சேலம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பா.பரத்