• கீழாநெல்லி இலையுடன் கரிசாலை இலையைச் சேர்த்து பால் கலந்து கொடுத்து வந்தால் இரண்டு மூன்று நாள்களிலேயே காமாலை நோய் நீங்கும்.
• கற்றாழை சாறை தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும்.
• ஆடுதொடா இலைக் கசாயம் சாப்பிட்டால் உடல் குடைச்சல், வாத பித்த கோளாறுகள் நீங்கும். இந்த இலைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு, காமாலை, காய்ச்சல் போன்றவற்றையும் நீக்கும்.
• உடல் சூட்டாலோ, கண்ணில் அடிபட்டாலோ கண் சிவந்து விடும். இதைக் குணப்படுத்த புளியம் பூவை அரைத்து கண்களைச் சுற்றி பற்றுப் போட்டால் தீர்வு கிடைக்கும்.
• பூண்டை அரைத்து அதன் சாறை உடலில் ஊறும் வரை படையின் மீது போட்டு நன்றாகத் தேய்க்க வேண்டும். தினமும் காலை மாலையில் படை உள்ள இடத்தில் சோப்பு போட்டு கழுவிய பின் இவ்விதமாக தேய்த்து வர ஆறே நாளில் படை நீங்கும்.
• சுத்தம் செய்த ஓமத்தை இளவறுவலாக வறுத்து உமி மற்றும் கசடு நீக்கி, வெல்லம், தேன் கலந்து அரைத்து காலை மாலை இருவேளை சாப்பிட, வயிற்றுப்போக்கு நீங்கும். ஆசனக்கடுப்பு, குளிர் காய்ச்சல், வயிறு இரைச்சல், இருமல், செரியாமை ஆகியவற்றிற்கும் ஓமம் அருமருந்தாகும்.
• மாமரத்துப் பிசினை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு சிறிதளவு நீரில் ஊற வைக்க வேண்டும். இதை இரவு படுக்கப் போகும் முன் காலிலுள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால், சில நாள்களில் பித்த வெடிப்பு சரியாகும்.
• கசகசாவை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து அடிக்கடி தடவி வந்தால், சருமத்தில் தோன்றும் கரும்படை சில தினங்களில் மாறி தோல் இயற்கை நிறம்பெறும்.
"எளிய மருத்துவம்' நூலிலிருந்து
- சி.ஆர்.ஹரிஹரன், சி.பன்னீர்செல்வம்