சேலம் வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மலர்க்கொடி ஒரு மாற்றுத்திறனாளி. தவழ்ந்து தான் மலர்க்கொடியால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போக முடியும். மூன்று சக்கர சைக்கிள் கிடைத்தால் மலர்க்கொடிக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் யாரை எப்படி அணுகுவதென்று மலர்க்கொடிக்கு தெரியவில்லை.
அவரின் நிலையை அறிந்த ஒருவர், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணிக்கு வாட்ஸ்-அப்பில் மலர்க்கொடியின் படத்துடன் தகவல் கொடுக்க... ரோஹிணி உடனே செயல்பட்டு ஒரே நாளில் மலர்கொடிக்கு மூன்று சக்கர சைக்கிள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை முன்னேறும் மாவட்டமாக மாற்ற ரோஹிணி ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவ நினைப்பவர்களுக்கென "எனது சேலம் எனது பெருமை' என்ற பெயரில் ஒரு வங்கிக் கணக்கை தொடங்கி, அதில் நன்கொடை அளிக்கலாம் என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வந்ததும், நன்கொடைகள் வங்கிக் கணக்கில் வந்து சேரத் தொடங்கின. சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிக்கு அந்த நன்கொடைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- பனுஜா