தெரிந்து கொள்வோம்! பனங்கற்கண்டு மகிமை! 

பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும்
தெரிந்து கொள்வோம்! பனங்கற்கண்டு மகிமை! 

பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இதை மிஸ்ரி என்றும் ஆங்கிலத்தில் ராக்கேண்டி என்றும் சொல்வார்கள். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும். இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்தப்படாத சர்க்கரை ஆகும். பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்னை, இருமல், சளி, ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்னை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. இதன் பயன்கள்:

• அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். பனங்கற்கண்டை சிறிது வாயில் போட்டு அந்த உமிழ் நீரை விழுங்கினால் தொண்டைக் கரகரப்பு சரி செய்வது, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றைச் செய்கிறது. 

• வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

• சோர்வாக தோன்றுகிறதா? அரை தேக்கரண்டி பசு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

• தீராத சளி பிரச்னை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு, அரை தேக்கரண்டி மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடித்து பாலுடன் கலந்து குடித்தால் சளித் தொல்லை காணாமல் போகும்.

• தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அரை தேக்கரண்டி மிளகுத்தூள், 1/2 தேக்கரண்டி நெய் மற்றும் 1/2 அரை தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

• சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.

• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது.

• 2 மேசைக்கரண்டி அளவு வெங்காயச் சாறு மற்றும் 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்னை சரியாகும். 
- பொ.பாலாஜிகணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com