எழுபத்தொன்றாவது "கேன்ஸ்' படவிழாவில் முன்னணி நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், சோனம் கபூர் கலந்து கொண்டு வித்தியாசமான உடை அணிந்து வலம் வந்தாலும், எல்லாரது கவனங்களையும் ஒரு சேர கவர்ந்து கொண்டவர் நாற்பத்திநான்கு வயதாகும் முன்னாள் உலகப் பேரழகி ஐஸ்வர்யா ராய்.
விழாவில் நடந்த சிவப்பு கம்பள வரவேற்பில், பட்டாம் பூச்சி டிசைனில் வித்தியாசமான நீல நிறத்தில் கிறிஸ்டல்களின் அசத்தும் வேலைப்பாடுகள் கொண்ட இருபது அடி நீள கவுன் அணிந்து, ஐஸ்வர்யா கேன்ஸ் படவிழாவில் தலைப்பு செய்தியானார். பட்டாம் பூச்சி உடையில் "வயசாச்சா ... எனக்கா..' என்று கேட்கிற மாதிரி அழகாக "கேட் வாக்' நடந்து வந்த ஐஸ்வர்யாவின் படங்கள், காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கின்றன.
இந்த பட்டாம் பூச்சி உடையை துபையைச் சேர்ந்த மைக்கேல் சின்கோ ஐஸ்வர்யாவுக்கென்று ஸ்பெஷலாக வடிவமைத்திருக்கிறார்.
உடையைப் பார்த்துப் பார்த்துத் தைக்க 125 நாட்கள் பிடித்ததாம். உடைக்கான செலவு, உடையின் மதிப்பு எவ்வளவு என்று சொல்லாவிட்டாலும், சில கோடிகளைத் தொடும் என்பது நிச்சயம். கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா கலந்து கொள்வது இது பதினேழாவது முறையாகும். மறக்காமல் மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா கேன்ஸ் படவிழாவில் கலந்து கொண்டார்.
- பனுஜா