""கடந்த 1998-ஆம் ஆண்டில் இருந்தே தொழில் முனைவோருக்கான பயிற்சியை அளித்து வருகிறேன். இதனால் , பலதரப்பட்ட பெண்களை அதிகம் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில், சென்ற மாதம் என்னுடைய பயிற்சி மையத்திற்கு ஒரு பெண்மணி வந்திருந்தார். நான் ஏதாவது ஒரு சிறு தொழில் செய்தாக வேண்டும். எனக்கு உதவுங்கள் என்றார். அதிலும் அதிக முதலீடு இருக்கக் கூடாது, மாதம் ரூ.2000 ஆவது வருமானம் கிடைக்க வேண்டும் என்றார். அவரைப் பற்றி விசாரித்ததில் அவர் அதிகம் கோயிலுக்குச் செல்பவர் என்பதையும், அங்கு அதிகம் பெண்களுடன் சகஜமாக பேசுபவர் என்பதையும் அறிந்தேன். அவரிடம் "நீங்கள்ஆர்கானிக் பெருங்காயம் செய்யலாமே அதற்கு ரூ. 1100 முதலீடு இருந்தால் போதும். (2 கிலோ செய்வதற்கு) 25 கிராம் ரூ. 25க்கு விற்பனை செய்யலாம் நல்ல லாபம் கிடைக்கும்' என்றேன். அவருக்கு நம்பிக்கை வரவில்லை. இருப்பினும் நான் சொல்வதை போன்று செய்து விற்பதாக கூறினார். அதற்கான பொருட்களையும் வாங்கி பெருங்காயம் செய்து டப்பாக்களில் அடைத்து கோயிலுக்கு போகும்போது 10 டப்பாக்கள் எடுத்துச் சென்றார். ஆர்கானிக் பெருங்காயம் வீட்டில் செய்தது என்றவுடன் நிறைய பேர் வாங்கி கொண்டனர். அதுமட்டுமல்லாது கேண்டீன் ஆர்டரும் கிடைக்க தற்போது வாரம் ரூ.1000- வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கிறார் என்பது மகிழ்ச்சிகுரிய விஷயம் தானே'' என்கிறார் சுய தொழில் ஆலோசகர் உமாராஜ்.
இந்த வாரம் அலங்கார செயற்கை நீரூற்று
தயாரிப்பு பற்றி பார்ப்போம்:
""சலசலக்கும் நீரோடையின் சத்தமும், அருவி நீரின் குளிர்ச்சியும் யாருக்குத்தான் பிடிக்காது. அழகான அந்த அருவியின் நீரோட்டத்தையும், அமைதி கலந்த அந்த சத்தத்தையும் எப்பொழுதாவது மட்டுமே ரசிக்கிற வாய்ப்பு கிடைக்கும் ஆனால் அதை வீட்டிலேயே உருவாக்கி ரசிக்க முடிந்தால் மகிழ்ச்சியானதாக இருக்கும் அல்லவா.
இதற்கு ரூ. 1000 முதலீடு இருந்தால் போதும் ஒரு செயற்கை நீரூற்று செய்யலாம். அதை அப்படியே ரூ.2000க்கும் விற்பனை செய்யலாம். இதற்கு தேவையான பிளாஸ்டிக் டப், பிளாஸ்டோ பாரிசம், பெயிண்ட், பூக்கள், செடிகள், புற்கள், பொம்மைகள், மோட்டார் (அக்வேரியத்தில் கிடைக்கும்) மேலும் பிளாஸ்டோ பாரிசம் கலக்கும் விதமும் கற்பனைத் திறனும் இருந்தால் நிறைய டிசைன் செய்யலாம். மேலும் வீட்டிற்குள்ளே, அழகுக்காகவும், வாஸ்து நம்பிக்கைக்காகவும் செயற்கை நீரூற்று வைக்கிற வழக்கம் பரவலாகி வருகிறது.
இதை செய்வதற்கு இரண்டு நாள்கள் தேவைப்படும் முழுக்க காய்ந்த பிறகுதான் பெயிண்ட் அடிக்க முடியும். விற்பனை செய்வதும் எளிது. நவராத்திரி, திருமணம், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களுக்கும் அன்பளிப்பாக வழங்கலாம். மேலும் இதையே ஹோட்டல்களில் கூட பெரியளவில் செட்டிங் செய்து தரலாம். இதில் கற்பனைக்கு ஏற்றாற்போல் கோயில், கோபுரம், மலை, பூங்கா, பானையில் இருந்து நீர் ஊற்றுவருவது போன்று செய்யலாம். இதற்கு முதலில் ஒரு நாள் பயிற்சி எடுத்துக் கொண்டாலே போதுமானது. நல்ல வரவேற்பு மிக்க லாபம் கொடுக்கக் கூடிய தொழில் இது.