எட்டு வயதுச் சிறுவன் அவன்! மாங்காய்கள் தொங்கும் மரம் ஒன்றைப் பார்க்கிறான்! ஆவலுடன் மாங்காய்களைப் பறிக்க மரத்தின் மீது ஏறுகிறான்! மரத்தை ஒட்டி ஒரு மின்கம்பி! அதை சிறுவன் கையால் தொட, அடுத்த நொடியே பல நூறு அடிகளுக்கு அப்பால் தூக்கி எறியப்படுகிறான்! தகவல் தெரிந்து உடனே மருத்தவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறான் சிறுவன்!
ஆனால் அவனது இடது கை முழுவதும் முழங்கை வரை கருகியிருந்தது! வேறு வழியின்றி மருத்துவர்கள் இடது கையை அகற்றினர்....
பள்ளியில் ஈட்டி எறியும் போட்டி! அதில் "துரோணாச்சாரியா' விருது பெற்ற ஆர்.டி.சிங் என்பவர் கலந்து கொண்டார். இடது கையை இழந்த சிறுவன் அதில் வெற்றியும் பெற்றான்!
சிறுவனின் ஆர்வத்தையும் திறமையையும் கண்ட ஆர்.டி.சிங் தாமே அதற்குப் பயிற்சி அளிக்க முன் வந்தார். அவரது சீரிய வழி நடத்துதலும், பயிற்சி முறைகளும் சிறுவனுக்குப் பக்க பலமாக இருந்தது!
அச்சிறுவனின் பெயர்தான் "தேவேந்திர ஜா ஜாரியா!'
2002ஆம் ஆண்டு தென்கொரியாவில் FESPIL போட்டி! அதில் தங்கம் வென்றார் ஜா ஜாரியா! இதன் காரணமாக ஏதென்ஸில் நடைபெற இருந்த பாராலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறும் தகுதி அடைந்தார்.
அப்போட்டிகளில் ஈட்டி எறிதலில் வேற்று நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் நிகழ்த்திய சாதனையாகிய 59.77மீ தூரத்தைவிட மிக அதிகமாக 62.15மீ எறிந்து புதிய சாதனையை ஏற்படுத்தினார்! இதன் மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு ஒரு தங்கப்பதக்கம் கிடைத்தது!
2013ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற IPC தடகளப் போட்டிகளில் (IPC ATHLETIC WORLD CHAMPIONSHIP) பங்கு பெற்று F-46 என்ற ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றார்!
2014ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஆசியன் பாரா விளையாட்டுப் போட்டிகளில் (ASIAN PARA GAMES) வெள்ளிப் பதக்கமும், தோஹாவில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற IPC போட்டிகளில் மற்றொரு வெள்ளிப் பதக்கமும் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார்!
2016ஆம் ஆண்டு பிரேசில் தலைநகர் ரியோ டீ ஜெனீரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் F-46 ஈட்டி எறிதல் பிரிவில் 63.97மீ தூரம் எறிந்து 2004இல் தான் நிகழ்த்திய சாதனையைத் தானே முறியடித்தார்! இதன் மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அடைந்தார்!
2004ஆம் ஆண்டு இவருக்கு "அர்ஜுனா விருது' வழங்கப்பட்டது! 2012ஆம் ஆண்டு "பத்ம ஸ்ரீ' விருது வழங்கப்பட்டது! பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் பாராலிம்பிக் விளையாட்டு வீரரும் இவரே ஆவார்!
என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன்,
கடுவெளி.