ஞான ஒளி!
புத்தர் தன் சீடர்களை அழைத்து, "பறவைகளைப்போல் நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்றார்.
"தாங்கள் சொல்வது எங்களுக்கு விளங்கவில்லை'' என்றனர் சீடர்கள்.
"பறவைகள் முட்டை இடுகின்றன. குஞ்சுகள் வெளிவரப் பலநாட்கள் பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் அடைகாக்கின்றன. குஞ்சுகள் முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வர முடியுமோ,முடியாதோ என்று அவை ஐயம் கொள்வதில்லை....நம்பிக்கையுடன் அடைகாக்கின்றன. நீங்கள் நான் சொல்வதை நம்பிக்கையுடன் பின்பற்றினால் ஞான ஒளி பெறுவீர்கள்!''என்றார் புத்தர்!
ஆர்.அஜிதா, கம்பம்.
ராஜாஜியின் நேர்மை!
ராஜாஜி வெளியூர்ப் பயணம் மேற்கொண்டால் தனக்குத் தேவையானதை டைப் செய்து முன்பே அனுப்பி வைப்பாராம். ஒருமுறை விருதுநகர் அரசு பயணியர் மாளிகையில் தங்கச் சென்றபோது ஒரு கொசுவலை கொடுத்தனர்.
"நான் டைப் செய்த லிஸ்டில் கொசுவலை கேட்கவில்லையே''என்றார் ராஜாஜி.
"இங்கு கொசுக்கள் அதிகம்...அதனால் மாளிகைக் கணக்கில் வாங்கி வைத்தோம்''என்றனர் நிர்வாகிகள்.
அந்த ரசீதை வாங்கிக் கொண்டு, பார்சலையும் பிரிக்காமல் சென்னைக்கு வந்து அதற்குரிய பணத்தை மணியார்டர் செய்த பிறகுதான் அந்தக் கொசு வலையை உபயோகித்தாராம் ராஜாஜி!
மல்லிகா அன்பழகன், சென்னை.
சீசரின் அறிவு!
அரசர் சீசருடைய எதிரிகள் அவரைக் குற்றம் சாட்டி எழுதிய மடல்கள் தற்செயலாக சீசரின் கைகளில் கிடைத்தன. படித்துப் பார்க்காமலேயே எல்லாவற்றையும் எரித்து விட்டார் அவர்!
"என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்?...., நீங்கள் எரிக்காமல் இருந்திருந்தால் இந்த மடல்களே எதிரிகளை அடையாளம் காணும் சான்று ஆகாதா?'' என்றார் அவரது நண்பர்.
"நண்பா! நான் எப்பொழுதும் எந்தச் சூழலிலும் கோபம் அடையக்கூடாது என்று நினைக்கிறேன். கோபத்தை உண்டாக்குகிற சான்றுகளையும் அழித்து விடுவதுதான் அதற்குச் சிறந்த வழி!....அதனால்தான் மடல்களை எரித்தேன்!''என்றார் சீசர்!
ஆர்.அஜிதா, கம்பம்.