கதைப் பாடல்
அடர்ந்த குளிரில் புதுதில்லி
அதனை ஒட்டிய புறநகரில்
படரும் பனியில் ஒலியெழுப்பி
பண்போடு விதிகள் தமைக் காத்து
வழியில் இருசக்கர வாகனம் ஒன்று -ஓட்டுனர்
விழியில் மக்களின் நலமேதான்!
சாலையின் இருபுறம் பார்வை செல்ல - பலர்
சால்வை, போர்வை இல்லாமல்
குளிரில் துடிப்பதை அவர் பார்த்தார்!
குமைந்தது நெஞ்சம்...பசி தீர்ந்தும் - கொடுங்
குளிரில் எப்படித் தூக்கம் வரும்? - குறை
நீங்கும் நாளும் என்று வரும்?
கவலையோடு அவர் செல்ல....
கார் ஒன்று எதிரே விரைவாக - வந்து
கண் இமைக்கும் நேரத்தில் மோதியது!
காயம் பட்டது!....குருதியுடன்!
வழக்குப் போட்டார்...."மோதியவர்
வழங்கிட வேண்டும் இழப்பீடு!'
"எத்தனை இலட்சம் கேட்பாரோ' - என
இடித்தவர் எண்ணிய நேரத்தில்
கேட்டார் அவரும் இழப்பீடு - சாலையில்
கேட்பார் இன்றிக் குளிரினிலே - கம்பளிப்
போர்வை எதுவும் இல்லாமல்
தூக்கம் தொலைப்பார் பல ஏழை!
ஆளுக்கொன்று தந்திடுவீர் - கம்பளியால்
அவரும் இரவில் தூங்கிடுவார்!
அதனைக் கேட்ட நீதிபதி
அம்மனிதரின் கருணை உள்ளத்தை
எண்ணி எண்ணி மிக வியந்தார்...
எது நேர்ந்தாலும் பண வேட்டை
ஆடும் உலகில் அன்புள்ளம்!
அவரைப் புகழ்ந்தது அம்மன்றம்!
-பூதலூர் முத்து