அண்ணன் தம்பிகள் ஒரு நால்வர்
ஆர்வம் உழைத்து வாழவதற்கு
ஒன்றாய் ஒரு தொழில் செய்வதற்கு
உள்ளம் விரும்பி யோசித்தார்!
பஞ்சுப் பொதிகள் பல வாங்கி
பார்க்கத் தகுந்த ஓரிடத்தில்
நால்வரும் வைத்தார் விற்பனைக்கு - வணிகம்
நன்றாய் வளர்ந்து ஓங்கியது!
ஒரு நாள் இளையவன் பார்வையிலே
ஓர் எலி அங்கே ஓடியது!
சிறிதே உருவம் என்றாலும்
சிதைத்து விடுமே பஞ்சையெல்லாம்!
செய்தியை மற்ற மூவர்க்கும்
சேர்த்தான் உடனே சிந்தித்து -அதைச்
செயலாய் ஆக்க அவர் முனைந்தார்!
சென்றான் தம்பி.....ஒரு பூனை
கண்டான்,...அதனைக் கொண்டு வந்தான்!
"கட்டுப் படுத்தும் எலிகளையே - நல்ல
காவல் இதுதான் பொதிகளுக்கு
கவலை இனிமேல் நமக்கில்லை!
பஞ்சுப் பொதியின் கூடத்தில் - பூனை
பகலும் இரவும் விழித்திருக்கும்!
அஞ்சி ஓடும் எலியெல்லாம்...
அன்பாய்ப் பூனையை வளர்த்திடுவோம்!
பூனையின் ஒவ்வொரு காலுக்கும்
பொறுப்பு ஏற்றார் தனித்தனியாய்!
இளையவன் பொறுப்பு...கால் ஒன்று - அவன்
இணைத்தான் அதிலே பூண் ஒன்று!
எலியைத் துரத்திய நேரத்தில்
எதிரே இருந்த தூண் மீது
மோதி விழுந்தது அப்பூனை - காயம்...
பூனை அணிந்த காலினிலே!
காயம் ஆற்றிட இளையவனும்
கனிவாய் எண்ணெய் தடவியபின்
காலில் சிறுதுணி கட்டி வைத்தான்!
பாலைத் தட்டில் பசிக்கு வைத்தான்!
இருளை விரட்ட எரிந்தது விளக்கு - ஓடிய
எலியைப் பிடிக்கத் துடித்தது பூனை!
எரியும் விளக்கின் அருகே ஓட - கால்
எண்ணெய்த் துணியில் பிடித்தது தீயும்!
அச்சம் கொண்டு பாய்ந்தது பூனை
அங்கும் இங்கும் தீயின் கொழுந்து!
மிச்சம் இன்றிப் பஞ்சுப் பொதிகள் - சாம்பல்
மேடாய் ஆயின... பெரிய இழப்பு!
மரியாதை ராமன் நீதிபதி!....மூத்தோர்
மூவரும் சென்று முறையிட்டார்! - "துணியை
இளையவன் காலில் கட்டியதால் - தீ
எரித்தது பஞ்சுப் பொதியெல்லாம்!
தவற்றுக்குக் காரணம் அவனேதான்
தம்பி என்றாலும் தயை வேண்டாம்!
அவனுக்குத் தண்டனை அளித்திடுவீர்
அவனிடம் பணத்தைப் பெற்றிடுவீர்!'
"அவனுக்குரிய கால் ஒன்று - காயத்தால்
அதனால் ஓட முடியாது!
தவற்றுக்குக் காரணம் பிற மூன்று! - அதனால்
தம்பிக்குத் தருவீர் இழப்பீடு!'
தீர்ப்பைக் கேட்ட மூவருமே - நெஞ்சம்
திகைத்தே போனார்....இப்படித்தான் - ராமனின்
தீர்ப்பு இருக்கும் ...எதிர்பாரா
திருப்பத்துடனே நீதி வரும்!
- பூதலூர் முத்து