சேவல் கூவும் புலர் பொழுதில்
திறந்தவுடன் கூண்டை விட்டு
சிறகடித்து ஓடும் பெட்டைக்கோழி -நன்கு
கூவத்தெரியாவிடினும்
குரலெடுத்துக் கொக்கரித்து
குப்பைகளைக் கிளறும் பெட்டைக்கோழி!
முட்டையிடும்! இட்ட பின்பு
முனைப்பாய் அடைகாத்திருக்கும்
முகம் சிவந்து தோன்றும் பெட்டைக்கோழி - பின்பு
இட்ட முட்டைகள் பொரிந்து
இறங்கி வரும் குஞ்சுகளை
இறக்கைகளால் அணைக்கும் பெட்டைக்கோழி!
குஞ்சுக்கூட்டம் பின்னால் வர
"கொக்....கொக்' கென்று கொத்திக்கொண்டு
குப்பை மேட்டில் திரியும் பெட்டைக்கோழி - உடன்
அஞ்சியஞ்சிக் குரல் கொடுத்து
ஆபத்திலே குஞ்சுகளை
அரவணைத்துக் காக்கும் பெட்டைக்கோழி!
காலை முதல் மாலைவரை
கண்டபடி அலைந்து விட்டு
கடைசியில் கூண்டடையும் பெட்டைக் கோழி - சிறு
ஓலைக் குடிசை வீட்டில் வாழும்
ஒன்றுமற்ற ஏழையர்க்கும்
உற்ற செல்வம் ஆகும் பெட்டைக்கோழி!
-புலவர் முத்து முருகன்