பெட்டைக்கோழி!

சேவல் கூவும் புலர் பொழுதில் திறந்தவுடன் கூண்டை விட்டு
பெட்டைக்கோழி!

சேவல் கூவும் புலர் பொழுதில் 
திறந்தவுடன் கூண்டை விட்டு
சிறகடித்து ஓடும் பெட்டைக்கோழி -நன்கு
கூவத்தெரியாவிடினும் 
குரலெடுத்துக் கொக்கரித்து
குப்பைகளைக் கிளறும் பெட்டைக்கோழி!

முட்டையிடும்! இட்ட பின்பு 
முனைப்பாய் அடைகாத்திருக்கும் 
முகம் சிவந்து தோன்றும் பெட்டைக்கோழி - பின்பு 
இட்ட முட்டைகள் பொரிந்து
இறங்கி வரும் குஞ்சுகளை 
இறக்கைகளால் அணைக்கும் பெட்டைக்கோழி!

குஞ்சுக்கூட்டம் பின்னால் வர 
"கொக்....கொக்' கென்று கொத்திக்கொண்டு
குப்பை மேட்டில் திரியும் பெட்டைக்கோழி - உடன் 
அஞ்சியஞ்சிக் குரல் கொடுத்து 
ஆபத்திலே குஞ்சுகளை 
அரவணைத்துக் காக்கும் பெட்டைக்கோழி! 

காலை முதல் மாலைவரை
கண்டபடி அலைந்து விட்டு 
கடைசியில் கூண்டடையும் பெட்டைக் கோழி - சிறு 
ஓலைக் குடிசை வீட்டில் வாழும்
ஒன்றுமற்ற ஏழையர்க்கும் 
உற்ற செல்வம் ஆகும் பெட்டைக்கோழி!

-புலவர் முத்து முருகன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com