இந்தியா என்பது எம்நாடு
இதுவே எங்கள் பொன்னாடு!
மலைகள் நதிகள் பலவுண்டு
மக்கள் தொகையின் வளமுண்டு!
கலைகள் வளரும் பெருநாடு
கண்ணியம் மிக்கத் திருநாடு!
உண்மை அன்பு அஹிம்சையிலே
உயர்வு பெற்றத் திருநாடு!
இந்து, முஸ்லிம், கிறித்தவமாம்
எல்லா மதங்களும் இங்குண்டு!
இனம், மொழி, இங்கே பற்பலவாம்!
என்றாலும் நாங்கள் இந்தியரே!
ஆயிரம் மொழிகள் இருந்தாலும்
அன்பே எங்கள் பொதுமொழியாம்!
வேற்றுமை எத்தனை இருந்தாலும்
ஒற்றுமை எங்கள் உயிர்மூச்சாம்!
- மீனா சுந்தர்