துள்ளித் திரியும் குழந்தைகளே
தோட்டம் அமைப்போம் வாருங்கள்!
பள்ளி இல்லா நாட்களிலே
பார்த்து வளர்ப்போம் கூடுங்கள்!
மல்லிகை முல்லை சாமந்தி
மலர்களின் தோட்டம் அமைத்திடுவோம்!
எல்லைகள் இல்லா ஆனந்தம்
இயற்கையில் கண்டு மகிழ்ந்திடுவோம்!
மரங்கள் வளர்த்துப் பூமியிலே
மழையைப் பெருக்க முயன்றிடுவோம்!
வரங்கள் மரங்கள் என்பதனை
வாழ்வில் நாமும் உணர்ந்திடுவோம்!
வாழை, தென்னை மரம் நட்டு
வாழ்க்கைத் தேவை அடைந்திடுவோம்!
ஏழை உழவன் உழைப்பில்தான்
இயங்கும் உலகம் அறிந்திடுவோம்!
வேரில் தொடங்கி இலையெல்லாம்
விரைந்து பயன்கள் கொடுக்கின்ற
பாரில் உயர்ந்த மரங்களையே
பாசத்தாலே வளர்த்திடுவோம்!
வீ.கே.கஸ்தூரிநாதன்