ஒரு குட்டிக் குரங்கு தோட்டம் போட ஆசைப்பட்டது! தோட்டம் போட்டால் நிறைய செடிகொடிகள் மரங்கள் முளைத்துப் பெரிதாகிக் காய்கனிகள் கிடைக்கும் இல்லையா? படாதபாடுபட்டு விதைகளைக் கொண்டு வந்து மண்ணில் புதைத்தது. பிறகு தண்ணீரும் விட்டது! "செடிகள் வளர்ந்து மரமாகிப் பூத்துக் குலுங்கி காய்கனிகள் கொட்டும். ஆசை ஆசையாய் அள்ளித் தின்னலாம்'' என்று கணக்கு போட்டது! என்ன கொடுமை! விதைகள் எதுவுமே முளைக்கவில்லை! தன் நம்பிக்கை வீணாகி விட்டதே என்று குட்டிக் குரங்கிற்கு ரொம்ப வருத்தமாகிவிட்டது.
அது ஒரு நாள் தன் சீனியர் குரங்கிடம் போய் ஆலோசனை கேட்டது. "நான் விதைத்த விதைகள் எதுவுமே முளைக்கவில்லை...ரொம்ப நம்பியிருந்தேன் எல்லாம் வீணாகிவிட்டது'' என்று ஒப்பாரி வைத்தது. சமாதானப் படுத்திய சீனியர் குரங்கு, "விதை போட்டால் தண்ணீர் ஊற்ற வேண்டும்....,நீ தண்ணீர் ஊற்றியிருக்க மாட்டாய்'' என்றது.
"ஆங்!...., ஒரு விதைக்கு எட்டு பக்கெட் தண்ணீர் தினம் தினம் காலையும் மாலையும் ஊற்றுவேன்'' என்று குட்டிக் குரங்கு குற்றச் சாட்டை மறுத்தது.
"அடடா! எட்டு பக்கெட் தண்ணீர் விட்டால் விதைகள் என்ன ஆகும்?...,அழுகிப் போயிருக்கும்!....,அதுதான் முளைக்கவில்லை!'' என்றது சீனியர் குரங்கு.
குட்டிக் குரங்கோ, "ஒரு விதை கூட அழுகவில்லை!'' என்று உறுதியாக கூறியது.
"அதெப்படி உனக்குத் தெரியும்?'' என்று கேட்டது சீனியர் குரங்கு.
"நான்தான் விதை முளைத்திருக்கிறதா என்று தினம் தினம் விதைகளை எடுத்து எடுத்துப் பார்க்கிறேனே''என்றது குட்டிக் குரங்கு!
"தினம் தினம் விதைகளை எடுத்துப் பார்த்தால் எப்படி அவை முளைக்கும்? அது அதற்கு என்று ஒரு காலம் இருக்கிறது. அதுவரை காத்திருப்பது அவரவர் கடமையாகும்...''என்றது சீனியர் குரங்கு!
நீதி:
நம்பிக்கை என்பது பொறுமையும் சேர்ந்ததுதான்!
(பஞ்ச தந்திரக் கதையிலிருந்து)
-தங்க. சங்கரபாண்டியன்