ஒரு செல்வந்தரும், திருட்டுக்குணம் உடைய ஒருவனும் நீண்ட தூர பிரயாணமாக இரயிலில் ஏறினார்கள். ஏறத்தாழ மூன்று நாள் பிரயாணம்.
செல்வந்தர், திருடன் என்று தெரியாமல் அவன் முன்னாலேயே தன் பணத்தையெல்லாம் எண்ணி சரி பார்த்தார். இரவில் இருவரும் உறங்கினார்கள். செல்வந்தர் அவனைச் சந்தேகப்பட்டார்.
திருடன் நள்ளிரவில் எழுந்து வியாபாரியின் தலையணை மற்றும் படுக்கை முழுவதும் ஆராய்ந்தும் பணம் கிடைக்கவில்லை. குழப்பமான மன நிலையில் படுத்துக் கொண்டான்.
இரண்டாம் நாளும் இருவரும் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு எதிரும் புதிருமாக அமர்ந்தார்கள். செல்வந்தர் திருடன் முன்னாலேயே பணத்தை எண்ணும்போது இன்று இரவு எப்படியாவது பணத்தை கபளீகரம் செய்துவிட வேண்டும் என மனதில் எண்ணினான். நள்ளிரவில் மீண்டும் ஆராய்ந்தும் பணம் கிடைக்காததால் திருடன் கோபமாகவும், ஏமாற்றத்துடனும் இருந்தான்.
மூன்றாம் நாளும் செல்வந்தர் பணத்தை எண்ண திருடன் நேரடியாகவே கேட்டான்......"ஐயா!....தங்கள் பணத்தைத் திருடவே இரண்டு நாட்களாகப் பயணம் செய்கிறேன்!.....எங்கு தேடியும் பணத்தைக் காணவில்லை....எங்குதான் வைத்திருந்தீர்கள்?'' என்றான்.
செல்வந்தர் சிரித்துக் கொண்டே, "நீ திருடன் என்று எனக்குத் தெரிந்துவிட்டது!....திருடனானாலும் உனக்கும் உறக்கம் உண்டு அல்லவா?.....நீ கண்ணயர்ந்த பிறகு உன் தலையணையின் கீழ் வைத்துவிட்டு நீ பல் துலக்கச் செல்லும் போது பணத்தை எடுத்துக் கொள்வேன்!'' என்றார்.
திருடன் அசடு வழிந்தான்.
"செல்வந்தர் தன்னிடமிருந்த பணத்திலிருந்து ஐந்தாயிரத்தை அவனிடம் கொடுத்து, "இனியாவது திருடாதே!.....இந்தப் பணத்தை வைத்து ஏதாவது தொழில் செய்து நேர்மையாக வாழ்க்கை நடத்து!'' என்றார்.
திருடன் அந்தப் பணத்தை வெட்கத்துடன் வாங்கிக் கொண்டு செல்வந்தரின் கால்களில் விழுந்து வணங்கினான்! இனி திருடுவதில்லை என சபதமேற்றான்.
இன்று மிக நல்ல நிலைமையில் உள்ள அவன் அந்த செல்வந்தரை நினைக்காத நாள் இல்லை!
-உ. இராசமாணிக்கம்