புள்ளிக் கோலம் போட்டுப் பார்!
புதுமைக் கணக்கு கற்றிடலாம்!
அள்ளி மாவை விரலிடுக்கில்
அளவாய்ப் போடல் தனித் திறமை!
எத்தனை புள்ளி வைத்தாலும்
ஏறி வளைந்து கோடுவரும்!
அத்தனை புள்ளி இணைப்பினிலே
அழகுக் கோலம் விரிந்திடுமாம்!
பூவும் கொடியும் கோலத்தில்
போடப் போட வந்து விடும்!
மாவை அள்ளிப் போடுகையில்
மனமும் ஒன்றி நின்றிடுமாம்!
வண்ண வண்ணப் பொடி தூவி
வாசல் நிறைத்துப் போடுகையில்
விண்ணில் காணும் வான வில்லும்
வீட்டின் முன்னால் விரிந்திடுமாம்!
நோக்கம் இங்கு கலையழகு!
நோக்குவார் நெஞ்சம் மகிழ்ந்திடுமாம்!
ஊக்கம் பெறலாம் கோலத்தை
உணர்ந்து போட்டால் நாள்தோறும்!
குரு.தேமொழி