கதைப் பாடல்
உயிர்களிடத்தில் அன்பு வேணும் என்ற கொள்கையில்
உறுதியாக இருப்பன்தான் உத்தமராஜா!
பயிர்களுக்கும் உயிரிருக்கும் பாடம் படித்தவன்!
பசுமை நண்பன் உத்தமனோர் பரிவு நிறைந்தவன்!
ஊர் முழுதும் தீபாவளி கொண்டாடும் வேளை
உத்தமனின் வீட்டினிலே மெத்த அமைதி!
ஆர்வமுடன் காரணத்தை உத்தமனிடத்தில்
அறியவந்தான் அருமை நண்பன் சத்திய சீலன்
"வகைவகையாய் ஊர்முழுதும் வாண வேடிக்கை
மத்தாப்பு, தரைச் சக்கரம், பாம்பு, கலசமும்
புகை மயமாய் ஊரிருக்கப் புதுமையாகவே
பொட்டு வெடிச் சத்தமில்லை புகையையும் காணோம்!
காரணத்தை அறிய உன்னைக் காண வந்தேன் நான்
கவலையின்றிக் களித்திருக்கும் காரணம் என்ன?''
ஆர்வமுடன் கேட்டு விட்டான் சத்திய சீலன்
அமைதியாகக் கூறுகிறான் உத்தமராஜா!
"மாடியிலே நாங்களெல்லாம் குடியிருக்கின்றோம்
வயது முதிர்ந்த பாட்டி தாத்தா தரை தளத்திலே
ஓடியாட முடியாத இருவர் மட்டுமே...
உயிர்களிடம் பாசம் அன்பு உடைய பண்பினர்
அவர்கள் வீட்டுக் காவலுக்கே அருமை நாயொன்று
ஐந்து குட்டி போட்டிருக்கு நேற்று முன்தினம்!
இவரைத் தேடி எவரொருவர் வந்த போதிலும்
இறகடித்துக் குரல் எழுப்பித் தெரியச் செய்யவே
கூண்டுக்கிளி இருக்கிறது..., கொய்யா மரம் உண்டு
கூட்டமாக அணில் வரினும் விரட்டுவதில்லை!
சண்டை போடத் தெரியாது சாந்த மனிதர்கள்!...
...தவறிக் கூடக் கடுமையாகப் பேசியதில்லை!
...வயதில் முதிர்ந்த தாத்தா பாட்டி வருந்திடாமலும்
வாலைக் குழைக்கும் நாயின் குழந்தை நடுங்கிடாமலும்
துயரம் கொண்டு கூண்டுக் கிளியும் துடித்திடாமலும்
சுறுசுறுப்பு அணிலைத் துரத்திடாமலும்
பார்த்துக் கொள்ள வேண்டும் இதைப் படித்திருக்கின்றேன்
படித்தது போல் நடப்பதுதான் பண்பா குமென்று
கூர்த்த மதி கொண்டவர்கள் கூறியதைத்தான்
கொள்கையாகக் கொண்டதையே கடைப்பிடிக்கின்றேன்..''
என்றுரைத்தான் இயல்புடனே உத்தமராஜா!
ஏற்றுக்கொண்டான் வாழ்த்திச் சென்றான் சத்தியசீலன்!
நன்று!நன்று! சிறுமிகளே! சிறியவர்களே!
நல்லனவை நல்லனவே நம்புவீர்களே!
பரிதி இரா.வேங்கடேசன்