ஓர் ஊர்ல ஒரு ராஜா. அவரு ரொம்ப கர்வம் பிடிச்சவரு. தான் கடவுளைவிடப் பெரியவர்னு நெனப்பு அவருக்கு. அவரோட சபையிலே இருந்தவங்க கிட்டே, "நான் பெரியவனா?...கடவுள் பெரியவனா?'' ன்னு கேட்டாரு! ராஜாவாச்சே! எல்லோருக்கும் பயம்! நமக்கேன் வம்புன்னு ராஜாதான் பெரியவன்னு ஒத்துக்கிட்டாங்க....
அந்த ஊர்ல ஒரு துறவி இருந்தாரு. ஒரு நாள் ராஜா அவரைச் சந்திச்சாரு. துறவி கிட்டே, "நான் பெரியவனா?... கடவுள் பெரியவனா?'' ன்னு கேட்டாரு.
அதுக்கு துறவி, "சந்தேமென்ன நீங்கதான் பெரியவர்....அதுக்குக் காரணமும் இருக்கு''ன்னு சொன்னார்!
ராஜாவுக்கு ஒரே ஆச்சரியம்! ....என்னடா இது இந்தத் துறவி இப்படி சொல்றாரு....நாம பெரியவன் என்கிறதுக்கு காரணம் வேறே இருக்குங்கிறாரே.....அப்படீன்னு நெனைச்சு, "துறவியாரே கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க...எதுனால என்னைப் பெரியவன்னு சொல்றீங்க....அதுக்குக் காரணம் வேறே இருக்குங்கிறீங்க....''
"அதுவா....,சொல்றேன் கேளு!....நீ ஒருத்தனை நாடு கடத்தணும்னு நெனச்சா உடனே அதைச் செஞ்சுடுவே....அதாவது உன் நாட்டு எல்லையைத் தாண்டி அவனை அனுப்ப முடியும்! ஆனா கடவுளால அது முடியாது!....ஏன்னா, அவரோட ராஜ்ஜியத்துக்கு எல்லையே இல்லை!....ஆகாயம், பூமி, அண்ட சராசரங்கள் இப்படி அளவே இல்லை....சொல்லப் போனா அவரோட ஆட்சி இல்லாத ஒரு இடமே இல்லை.....அவர் யாரை எந்த நாட்டுக்குக் கடத்தினாலும் அதுவும் அவரோட ராஜ்ஜியமாத்தான் இருக்கும்.....இல்லியா?.... இப்படி இருக்கறவர் உன்னை மாதிரி எப்படி நாடுகடத்த முடியும்?'' என்றார்.
ராஜாவுக்கு விஷயம் தெளிவாக புரிஞ்சிடிச்சு!....அவரோட ஆணவம் தொலைஞ்சிடிச்சு! துறவியை விழுந்து வணங்கிட்டு ஊருக்குப் போய்ச் சேர்ந்தார் ராஜா!
-மயிலை மாதவன்