ஓர் ஊரில் ஒரு அரசன் இருந்தான். அவனுடைய அரசவையில் ஒரு ராஜகுரு இருந்தார். அது நல்ல கோடைக்காலம்! அரசன் மதகுருவிடம் தனக்குக் கடவுளைக் காட்டுமாறு வேண்டினான். மதகுரு, "அது முடியாத காரியம்...'' என்றார்.
அரசனோ, "நீங்கள் கடவுளைக் காட்டத்தான் வேண்டும்....நான் உத்தரவிடுகிறேன்!'' என்றான். மன்னனின் கட்டளையை மீற முடியுமா?
"சரி....,என்னுடன் வெளியில் வாருங்கள்'' என்றார் ராஜகுரு. அன்று நல்ல வெய்யில்! பகல் 12 மணி! உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்து கொணடிருந்ததது! சூரியனை உற்றுப் பார்க்கச் சொன்னார் ராஜகுரு. அண்ணாந்து பார்த்த மன்னருக்கு கண் கூசியது. அவரால் பார்க்க முடியவில்லை.
"என்னால் பார்க்க முடியவில்லை'' என்றார் அரசர்.
உடனே மதகுரு, "உங்களால் கடவுளின் சேவகனான சூரியனையே பார்க்க முடியவில்லை.....பிறகெப்படி கடவுளைப் பார்க்க முடியும்?'' என்றார்.
அரசன் வெட்கித் தலைகுனிந்து கடவுளின் ஆற்றலை உணரத் தொடங்கினான்!
-மாதவன்