ஓர் ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தார். நாக்கில் எச்சில் ஊற வைக்கும்...மணம் ....பரப்பும் சுவையான வடை!ஒரு காக்கை அருகிலிருந்த மரக்கிளையில் அமர்ந்து கொண்டிருந்தது. வடையின் சுவை அதை மயக்கிக் கொண்டிருந்தது. வடையை எப்படியாவது லவட்டிக் கொண்டு போக சமயம் பார்த்துக் கொண்டிருந்தது. பாட்டி ஏமாந்த சமயம்.....படாரென்று பாய்ந்து ஒரு வடையைக் கவ்விக் கொண்டு பறந்தது. பாட்டி அருகிலிருந்த சிறு குச்சியை எடுத்துக் கொண்டு காகத்தின் பின்னாலேயே சென்று விரட்டினாள். போன வடை திரும்புமா என்ன....! பாட்டி காக்கையை செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தாள்.
காகம் ஆற அமர மரக்கிளையில் அமர்ந்தது. "கா...கா..........கா...கா.....'' என்று கத்தி, தன் சுற்றத்தை அழைத்தது. காக்கைகள் அங்கு வந்து சேர்ந்தன. வடையைப் பங்கு போட்டு உண்டன.
பகிர்ந்து உண்ணும் காக்கையின் பண்பைக் கண்ட பாட்டி வியந்தாள். அவளுக்குக் காகத்தின் மீது இரக்கம் ஏற்பட்டது....காகத்தின் பகிர்ந்து உண்ணும் பண்பிற்காக காக்கைக்கு தினம் ஒரு வடையைக் காக்கைக்கு இன்று வரை கொடுத்து வருகிறாள்!
பாட்டிக்கு இப்போது வியாபாரமும் நன்றாக நடக்கிறது!
-வீ.சிவசங்கர்