ஒருவன் இறந்து போனபின் மறு உலகத்தை அடைந்தான். அவனுக்கென்று விசாலமான அறை அந்த உலகத்தில் இருந்தது! அதில் ஆடம்பரப் பொருட்கள் நிறைந்திருந்தன. அவனுக்குப் பசியெடுத்தது. "யாரங்கே?'' என்று கத்தினான். ஒரு சேவகன் ஓடோடி வந்தான்.
"ஐயா என்ன வேண்டும்?''
"சாப்பிட ஏதாவது கொண்டு வா!''
சுவையான உணவு கொண்டு வரப்பட்டது. சாப்பிட்டான். எப்பொதெல்லாம் பசித்ததோ அப்போதெல்லாம் உணவு சுவையுடன் வந்தது. மெத்தையுடன் கூடிய கட்டில்! அதில் படுத்துத் தூங்கினான். எழுந்தான். உணவருந்தினான். மீண்டும் தூக்கம்...இதர சந்தோஷங்களும் கிடைத்தன.
எல்லாம் விரைவிலேயே அலுத்துப் போய்விட்டது. தான் எதற்கும் பயன்படாதவனாக ஆகி விட்டோமோ என்ற பயம் தோன்றியது. ஏதாவது வேலை செய்ய வேண்டும்போல இருந்தது.
சேவகனைக் கூப்பிட்டு, "எனக்கு இந்த வாழ்க்கை அலுத்து விட்டது... ஏதாவது வேலை செய்ய வேண்டும் போல இருக்கிறது...ஏதாவது வேலை கொடு!'' என்றான்.
"ஐயா மன்னிக்க வேண்டும்!....இங்கே வேலை செய்வதற்கான வாய்ப்பை மட்டும் என்னால் ஏற்படுத்தித் தர இயலாது'' என்றான் சேவகன்.
அவனுக்குக் கோபம் வந்து விட்டது!....
"என்னால் இந்த சலிப்பான வாழ்க்கையைத் தாங்கவே முடியவில்லை. இப்படி சும்மா இருப்பதை விட நரகமே மேல்!....என்னை நரகத்திற்கு அனுப்பி விடு!''
சேவகன் பணிவுடன் சொன்னான்...
"ஐயா!...தாங்கள் இதுவரை எங்கே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?''
ஆம்!....உழைப்பு இன்றி உண்பதும், உறங்குவதும், சும்மா இருப்பதும் நரகம்தான்.
-மயிலை மாதவன்