கதைப் பாடல்
அப்பா அலுவலகம் செல்ல
ஆயத்த மானார் காலையிலே
எப்போதும்அவர் பணியினிலும்
எதிலும் உறுதி யாயிருப்பார்
உயர்ந்த பதவி அவர்பணிதான்
ஊரிலும் நல்ல பெயரெடுத்தார்
பயமென் பதுவே அவர்க்கில்லை
பணியிலே முதன்மை அவரெல்லை
அதிகாரி ஆனதால் உடையினிலே
அக்கறை காட்டும் இயல்புடையார்
மதிப்புடை உடையில் தயாரானால்
மாலை வரைக்கும் அழகுதரும்
ஐந்து படிக்கும் அவர்மகனும்
அப்பா என்றே ஓடிவந்தான்
பாய்ந்தே தேனீர் குவளைதனை
பார்க்காது தட்டி விட்டுவிட்டான்
அப்பாவின் உடைகள் தேனீரால்
அசுத்த மானது அவருக்கே
எப்போது மில்லா அளவுக்கே
எரிச்சல் கோபம் வந்ததுவாம்
கம்பை எடுத்தார் மகன்தன்னை
கடிந்தே அடித்திட முயன்றாரே
பயந்த சிறுவன் ஓடிவிட்டான்
பக்கம் அத்தை வீட்டினிலே
அத்தை யிடமே கூறிவிட்டு
அங்கே ஒளிந்து கொண்டானே
உத்தம நடத்தை அவர் வீட்டில்
உண்மை மட்டுமே பேசிடுவார்
அப்பா கம்புடன் ஓடிவந்தார்
அக்கா என் மகன் வந்தானா
இப்போ கிடைத்தால் நொருக்கிடுவேன்
எங்கே அவன்தான் என்றாராம்
தம்பி உன்மகன் வரவில்லை
தயங்கிப் பொய்யே சொன்னாராம்
நம்பிய அவரும் அலுவலகம்
சென்றார் அன்று வரும்பொழுது
சாக்லேட் பொட்டலம் வாங்கிவந்தே
தந்தார் கோபம் மாறியதே
நன்மை பயந்த அப்பொய்யே
நன்றாய் மெய்போல் ஆனதுவே!
-கொ.மா.கோதண்டம்