முனிவர் ஒருவரிடம் சீடர்களாகச் சேர் மூவர் வந்தனர். மூவரும் நண்பர்கள். அவர்களை மறுநாள் வரச் சொன்னார் முனிவர். தன் மனைவியிடம் மறுநாள் அவர்கள் வரும்போது, தமது காதில் ஒரு பெரிய ஓணான் புகுந்து தாம் இறந்து விட்டதாகச் சொல்லச் சொன்னார். மறுநாள் அவர்கள் வந்தனர். முனிவர் கூறியபடியே அவர்களிடம் சொன்னாள் முனிவரின் மனைவி.
மூவரில் ஒருவன், "அடடா இப்படி ஆகிவிட்டதே....அவரது ஜாதகத்தில் திசை சரியாயில்லை போலிருக்கிறது...அதனால்தான் இப்படி ஆகியிருக்கும்'' என்று கூறினான்.
மற்றொருவன், "ஒருவேளை, முன்வினைப் பயனால்தான் இப்படி ஆகியிருக்கும்... என்ன செய்வது?'' என்றான்.
மூன்றாமாவன் முனிவரின் மனைவியின் முகத்தை உற்றுப் பார்த்தான். பின்னர் அவளிடம், ""முனிவர் உயிருடன்தான் இருக்கிறார்!'' என்று உறுதியாக, ஆணித்தரமாகச் சொன்னான்!
அதுவரை உள்ளே ஒளிந்து கொண்டிருந்த முனிவர் வெளியே வந்தார்!
அவர் அந்த மூன்றாமாவனைப் பார்த்து, "எப்படிக் கண்டுபிடித்தாய்?'' என்று கேட்டார்.
"உமது மறைவினால் வரக்கூடிய துக்கம் உங்கள் மனைவியின் முகத்தில் கொஞ்சமும் இல்லை. அடுத்தது ஒரு பெரிய ஓணான் காதில் நுழைவது என்பது நடக்காத காரியம். இதுவரை யாரும் ஒணான் காதில் நுழைந்து இறந்ததாக நான் கேள்விப்பட்டது கூட இல்லை.... எனவேதான் அப்படி உறுதியாகச் சொன்னேன்!'' என்றான் அந்த மூன்றாவது சீடன்.
முனிவர் புன்னகைத்து, "சரி நாளையிலிருந்து நீ என்னடம் கற்க வரலாம்!'' என்றார்.
"என் நண்பர்களுடன்தானே?''
"சரி, மூவருமே கற்க வாருங்கள்'' என்றார் முனிவர் புன்னகைத்தபடி!
-மாலோலன்