கருவூலம்: அந்தமான் நிகோபார் தீவுகள்

அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவைச் சேர்ந்த ஏழு யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். சென்னையிலிருந்து 1,450 கிலோமீட்டர் தொலையில் வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ளது.
கருவூலம்: அந்தமான் நிகோபார் தீவுகள்

அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவைச் சேர்ந்த ஏழு யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். சென்னையிலிருந்து 1,450 கிலோமீட்டர் தொலையில் வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ளது. மொத்தம் 572 தீவுகளை தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. இதில் அந்தமானில் 550 தீவுகள் அமைந்துள்ளன. இதில் 28 தீவுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். நிகோபாரில் 22 தீவுகள் அமைந்துள்ளன. இதில் 10 தீவுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். 

அந்தமான் என்ற வார்த்தையானது மலாய் மொழியில் அனுமனைக் குறிக்கும் வார்த்தையாகும். நிகோபார் என்றால் நிர்வாண மக்கள் வாழும் இடம் (The Land of Naked People) என்ற பொருளைக் குறிக்கும். அந்தமான் தீவுகளின் தலைநகரம் போர்ட் பிளேயர். நிகோபார் தீவுகளின் தலைநகரம் கார் நிகோபார் தீவு. 

அந்தமானின் மொத்த நிலப்பரப்பு 8,249 சதுரகிலோமீட்டராகும். அந்தமானில் ஆண்களும் பெண்களுமாக மொத்தம் 3,79,944 மக்கள் வசிக்கிறார்கள். அந்தமானில் வங்காளம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது. துணைநிலை ஆளுநர் அந்தமான் தீவுகளை ஆட்சி செய்கிறார்.
அந்தமான் தீவுகளில் ரயில் போக்குவரத்து ஏதும் இல்லை. 

ஒவ்வொரு வருடமும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் ஆகியவை சிறந்த சீசனாகும். இந்த மாதங்களில் அந்தமானைச் சுற்றிப் பார்க்கச் செல்லலாம். மழைக்காலமானது ஜூன் முதல் செப்டம்பர் வரை இருக்கும். மழைக்காலத்தில் அதிக அளவு மழை பொழியும். அந்தமானில் மழைக்காலத்தில் 200 முதல் 300 மில்லிமீட்டர் வரை மழை பொழியும்! இத்தகைய சமயங்களில் கடல் அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும்! 

அந்தமான் தீவுகள் 22.மார்ச்.1942 முதல் 07.அக்டோபர்.1945 வரை ஜப்பானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

மின் உற்பத்தி

தெற்கு அந்தமான் தீவில் 15 மெகாவாட் திறனுள்ள டீசல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியின் மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இரண்டு முறைகளில் மட்டுமே பிரதானமாக மின்உற்பத்தி நடைபெறுகிறது.

செல்லுலர் ஜெயில்

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை கடுமையாக தண்டிக்க அந்தமானில் உருவாக்கப்பட்ட இடமே இந்த செல்லுலர் ஜெயில் ஆகும். இந்த செல்லுலர் ஜெயில் 1896 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கி 1906 ஆம் ஆண்டில் அதாவது சுமார் பத்து ஆண்டுகளில் முற்று பெற்றது. சுதந்திரத்திற்காக போராடும் வீரர்களை தனிமைச் சிறையில் அடைத்து வைத்து மிகக் கடுமையாக வேலை வாங்கி அவ்வாறு வேலை செய்ய இயலாதவர்களை தூக்கில் போட்டு தண்டித்த இடம். 
இந்த ஜெயிலில் தான் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய வீர சாவர்க்கர் பல வருடங்கள் தனிமைச் சிறையில் வாடினார். நுழைவு வாயில் ஒட்டி அமைந்த வடகிழக்கு மூலைப் பகுதியில் மூன்றாவது மாடியின் கடைசி அறையில் அவர் இத்துன்பத்தை அனுபவித்துள்ளார். தற்போது இந்த அறையில் அவருடைய புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெயிலில் சுதந்திர ஜோதி ஒரு மண்டபத்தில் அமைக்கபட்டு தொடர்ந்து சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 
மாலைநேரத்தில் இந்த ஜெயிலில் சவுண்ட் அண்டு லைட் ஷோ ஒன்றை நடத்துகிறார்கள். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய நம் தியாகிகளின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்துகிறார்கள். 

கார்பியன் கோவ் கடற்கரை (Corbyn's Cove BeachCorbyn's Cove Beach) 

போர்ட்பிளேயர் தலைநகரில் சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ ஒரு அழகிய கடற்கரை இது. இந்த கடற்கரை பிறை வடிவத்தில் அமைந்துள்ளதும் சிறப்பு. மேலும் இங்கே மோட்டார் படகுகளும் ஜெட்ஸ்கி (ஒங்ற் நந்ண்) எனும் ஸ்பீட் போட்டுகள் இயக்கப்படுகின்றன. இந்த பீச்சிலிருந்து பார்த்தால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிறிய தீவு காட்சியளிக்கிறது. இந்த தீவிற்கு வைப்பர் ஐலண்ட் என்று பெயர். போர்ட்பிளேயரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இவ்வழியில் இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளை சுட்டுக் கொல்லுவதற்காக வழியெங்கும் ஜப்பானியர்கள் அமைத்துள்ள பங்கர்களையும் (Japanese Bunkers) காணலாம். 

ஹேவ்லாக் தீவு (Havelock Island)

அந்தமான் தீவுகளில் மிக முக்கியமான சுற்றுலாத் தீவாக ஹேவ்லாக் தீவு கருதப்படுகிறது. போர்ட்பிளேயரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலையில் அமைந்துள்ளது. கடலில் இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டும். ஹேவ்லாக் தீவில் அதிக அளவில் மக்கள் வசிக்கிறார்கள். பவழப்பாறைகள் அதிகமுள்ள கடல்பகுதியாகும். இங்கே தங்குவதற்கு சிறப்பான விடுதிகள் அமைந்துள்ளன. ஹேவ்லாக் தீவில் சுற்றுலா பயணிகள் ரசிப்பதற்கேற்ப ராதாநகர் கடற்கரை, எலிபெண்ட் கடற்கரை, விஜயநகர் கடற்கரை மற்றும் காலாபத்தர் கடற்கரை என நான்கு முக்கியமான கடற்கரைகள் அமைந்துள்ளன. ராதாநகர் கடற்கரை ஆசிய கண்டத்தில் உள்ள கடற்கரைகளில் மிகவும் சுத்தமான அழகான ஒரு கடற்கரை என்று டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அழகிய கடற்கரையாகும்.

பாரடாங் தீவு

போர்ட்பிளேயரிலிருந்து சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பாரடாங் தீவில் இரண்டு முக்கியமான சுற்றுலா மையங்கள் உள்ளன. ஒன்று சுண்ணாம்புப்பாறை குகை (Limestone Cave). மற்றொன்று மண் எரிமலை (Mud Volcano). மேலும் போர்ட்பிளேயரிலிருந்து இந்த தீவிற்குச் செல்லும் வழியில் ஒரு காட்டுப் பகுதியில் "ஜாரவா' பழங்குடியினர் வசிக்கிறார்கள். 

ஜராவா பழங்குடியினர் (Jarawas)

அந்தமான் தீவைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஜராவாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தெற்கு அந்தமான் மற்றும் மத்திய அந்தமான் காடுகளில் வசிக்கிறார்கள். தற்போது சுமார் 250 முதல் 400 பழங்குடிகள் மட்டுமே வசிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தங்களுக்கென பிரத்யோகமாக ஒரு மொழியில் பேசிக்கொள்ளுகிறார்கள். இவர்கள் தங்களைத் தவிர மற்ற மனிதர்களோடு பேசுவதில்லை. காட்டுப் பன்றிகளை வேட்டையாடி முக்கிய உணவாகக் உட்கொள்ளுகிறார்கள். மேலும் ஆமைகள் மற்றும் அவற்றின் முட்டைகள், நண்டுகள், பழங்கள் மற்றும் தேன் இவற்றையே உட்கொள்ளுகிறார்கள். மேலும் ஆற்றில் மீன்களை வில் அம்பு கொண்டு பிடித்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பெண் ஜராவாக்கள் கூடைகளின் உதவியோடு மீன்களைப் பிடிக்கிறார்கள். இவர்கள் மிகச்சிறிய குடிசைகளில் வசிக்கிறார்கள். 

சுண்ணாம்புக் குகை (Lime Stone Cave)

பாராடங் தீவிலிருந்து மோட்டார் படகு மூலம் சுமார் அரைமணி நேரம் பயணித்து சுண்ணாம்புக் குகைப் பகுதியை அடையலாம். பல மில்லியன் வருடங்களுக்கு முன்னால் உருவானதாக கருதப்படும் இந்த சுண்ணாம்புப்பாறைக் குகைகள் கடல்வாழ் உயிரினங்கள், பவழப்பாறைகள் மற்றும் பல இயற்கைப் பொருட்களால் உருவானவை. இத்தகைய பாறைகள் எளிதில் கரையக்கூடியவை என்று கூறுகிறார்கள். இந்த குகையில் மேலே உள்ள ஓட்டைகள் மூலமை சூரிய ஒளியானது உள்ளே நுழைகிறது. மழைநீர் மற்றும் வேறு பல காரணங்களினால் இவை கரைந்து பல்வேறு விநோதமான வடிவங்களில் காட்சியளிக்கின்றன. சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ளது இந்த குகை. 

மண்எரிமலை (Mud Volcano)

பாரடாங் தீவின் படகுத்துறையிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலையில் இந்த எரிமலை அமைந்துள்ளது. 1983 ஆம் ஆண்டில் ஒருமூறை தன் சீற்றத்தைக் காண்பித்தது. பின்னர் 18 பிப்ரவரி 2003 அன்று மீண்டும் சீற்றத்தைக் காண்பித்தது. 

மாங்குரோவ் காடுகள் (Mangrove Forest)

தரைக்கு மேல் வேர்கள் அடர்ந்திருக்கும் இவ்வகைத் தாவரங்கள்அடர்ந்த இக்காடுகள் கடல் அரிப்பைத் தடுப்பதில் முக்கியமானவை. மேலும் இவை பவளப்பாறைகள், மீன்கள், இறால்கள், நண்டுகள் போன்றவை நன்கு வளர துணை நிற்கின்றன.

ராஸ் மற்றும் நார்த்பே தீவுகள்

அந்தமானுக்கு மிக அருகில் இரண்டு தீவுகள் உள்ளன. முதலாவது ராஸ் தீவு. இது முழுக்க முழுக்க கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய தீவு. இதற்கு அருகில் உள்ள ஒரு தீவு நார்த்பே தீவு. இங்குதான் பவழப்பாறைகள் மிகுதியாக உள்ளன.

ராஸ் தீவு

போர்ட் பிளேயரின் ஒரு பகுதிக்கு இந்த தீவு ஒரு இயற்கைப் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது. 

பிரிட்டிஷ் கடல் சர்வேயர் சர் டேனியல் ராஸ் என்பவரின் பெயர் இத்தீவிற்கு சூட்டப்பட்டுள்ளது. இத்தீவு பிரிட்டிஷாரின் தலைமையகமாக செயல்பட்டுள்ளது. இத்தீவில் அச்சகம், மருத்துவமனை, தபால் நிலையம், டென்னிஸ் கோர்ட், தண்ணீர் சுத்திகரிக்கும் நிலையம், பேக்கரி, நூலகம், பொழுதுபோக்கு கிளப் என அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டன. இத்தீவில் பிரிட்டிஷ் அதிகாரிகளாஸ் அழகிய தோட்டங்கள் புல்வெளிகள் அமைக்கப்பட்டன. பல நவீன வசதிகள் நிறைந்த இந்த தீவு "கிழக்கு பாரீஸ்' என்று அழைக்கப்பட்டது. 
26 ஜூன் 1941 அன்று ஒரு மிக கடுமையான பூகம்பம் ஏற்பட்டு இத்தீவு பிளவுபட்டது. இதனால் இத்தீவில் இருந்த பல கட்டங்கள் சேதமடைந்தன. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் ஆதிக்கம் இங்கே அதிகரித்தது. 23 மார்ச் 1942 அன்று ஜப்பான் நாட்டுப் படையினர் போர்ட்பிளேயரில் வந்து இறங்கினார்கள். ஜப்பான் நாட்டுப் படையினர் பல இடங்களில் பங்கர்களை அமைத்து காவல் காத்தார்கள். ஜப்பானியரின் ஆதிக்கத்தினால் 1942 }இல் பிரிட்டிஷார் இத்தீவிலிருந்து வெளியேறினார்கள். நாளடைவில் போர்ட் பிளேயர் ஜப்பானின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பின்னர் இந்த ராஸ் தீவு 18 ஏப்ரல் 1979 அன்று இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் வந்தது. இருபது ரூபாய் நோட்டின் பின்புறம் காணப்படும் கலங்கரை விளக்கம் இந்த தீவில் தான் உள்ளது என்பது இத்தீவின் சிறப்பம்சமாகும். 

நார்த்பே தீவு

ராஸ் நார்த்பே தீவும் அளவில் மிகச்சிறியது. இந்த பகுதியில் உள்ள கடற்கரை முழுவதும் பவளப்பாறைகளால் நிறைந்தது. இந்த பகுதியில் ஸ்கூபா டைவிங், சீ வாக்கிங், கிளாஸ் போட் என பல ஆச்சரியமான விஷயங்கள் உள்ளன. ஸ்கூபா டைவிங் என்பது பிரத்யோக உடைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டரை அணிந்து கடலுக்குள் சென்று பவளப்பாறைகளை நேரிடையாக கண்டு மகிழலாம். கிளாஸ் போட் என்பது பத்து பேர்கள் அமரக்கூடிய ஒரு படகின் தரைப்பகுதியில் சக்தி வாய்ந்த உருப்பெருக்கியை பொருத்தியுள்ளார்கள். படகில் அமர்ந்து கொண்ட பின்னர் படகுக்காரர் படகை கடலில் இயக்குகிறார். சக்தி வாய்ந்த உருப்பெருக்கியானது சுமார் முப்பது அடி ஆழத்தில் உள்ள பவளப்பாறைகளை நம் அருகில் கொண்டு வந்தது காட்டுகிறது. சுமார் அரை மணிநேரம் நாம் படகில் பயணித்தபடியே இப்பவளப் பாறைகளையும் கடல் பாம்புகளையும் பலவிதமான வண்ண மீன்களையும் கண்டு ரசிக்கலாம். 

சீ வாக் (Sea Walk)

ஏழு முதல் எழுபது வயது வரை உள்ளவர்கள் இந்த சீ வாக்கை மேற்கொண்டு மகிழ்ச்சி அடையலாம். இதற்கென பிரத்யோகமாக கடற்கரையில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு உங்களை அழைத்துச் சென்று தலையில் ஹெல்மெட் போன்ற ஒரு கருவியை பொருத்தி அங்கிருந்து ஏணியின் மூலம் கடலுக்குள் இறக்கி விடுகிறார்கள். தலையில் பொறுத்தப்பட்டுள்ள கருவியின் மூலம் நீங்கள் சிரமமின்றி சுவாசித்து இதில் பொறுத்தப்பட்டுள்ள கண்ணாடி மூலம் கடலுக்குள் உள்ள பவளப்பாறைகள் மற்றும் மீன்களை பார்த்து, தொட்டு இரசிக்கலாம். சுமார் இருபது நிமிடங்கள் உங்களை கடலுக்குள் நடக்க வைக்கிறார்கள். கடலுக்குள் நடக்க உங்களுக்கு நீச்சல் தெரிய வேண்டியதில்லை!

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங் என்பது கடல் நீருக்குள் பிரத்தியோக உபகரணங்களை அணிந்து பயணம் செய்து கடலுக்குள் உள்ள உயிரினங்களை நேரிடையாக கண்டுகளிக்கும் ஒரு விளையாட்டு. தற்போது உலகத்தின் பல பகுதிகளிலும் ஸ்கூபா டைவிங் நடைபெறுகிறது. கடல் நீருக்குள் சுவாசிக்க சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீருக்குள் நீந்த காலில் தவளைக்கால் போன்ற ஒரு அமைப்பு மாட்டப்படுகிறது. இதைப் பயன்படுத்தி நீங்கள் தண்ணீருக்குள் நகரலாம். கண்களைப் பாதுகாக்க பிரத்யோகமான கண்ணாடி வழங்கப்படுகிறது. இதை அணிந்து கொண்டால் நீருக்குள் நன்றாகப் பார்க்க முடியும். கடல்நீருக்குள் முப்பது நிமிடங்கள் வரை நீங்கள் நீந்தி புதிய அனுபவத்தைப் பெறலாம். அதிகபட்சமாக கடலுக்குள் 25 அடி ஆழம் வரை நீங்கள் செல்ல முடியும். அந்தமானில் நார்த்பே தீவு மற்றும் ஹேவ்லாக் தீவில் எலிபெண்ட் பீச் ஆகிய இடங்களில ஸ்கூபா டைவிங் மேற்கொள்ள முடியும். 

நெய்ல் தீவு (Neil Island)

நெய்ல் தீவானது அளவில் சற்றே சிறியது. போர்ட்பிளேயரிலிருந்து தெற்காக 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தீவில் ஏராளமான பழங்களும் காய்கறிகளும் விளைவிக்கப்படுவதால் இத்தீவானது அந்தமான் தீவுகளின் காய்கறிக் கிண்ணம் (Vegetable Bowl of Andaman Islands) என்று அழைக்கப்படுகிறது. போர்ட்பிளேயரிலிருந்து ஒன்றரை மணிநேரத்தில் படகுகளின் மூலம் பயணித்து நெய்ல் தீவை அடையலாம். சுமார் ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டது. இரண்டு மணி நேரத்தில் ஒருவர் நெய்ல் கடற்கரை முழுவதையும் நடந்தே சுற்றி வந்து விடலாம். இந்த சிறிய தீவில் சுமார் 2675 மக்கள் வசிக்கிறார்கள். இப்பகுதியில் உள்ள கடற்கரை மணலானது வெண்மையான நிறத்தில் மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள கடற்கரைப் பகுதிகளுக்கு ராம்நகர், சீதாபூர், லக்ஷ்மண்பூர் மற்றும் பரத்பூர் என பல இராமாயண கதாபாத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

மீதி அடுத்த இதழில்...

தொகுப்பு ஆர்.வி. பதி, கல்பாக்கம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com