இரவு பத்து மணி. தன் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு சேலம் பேருந்து நிலையம் விரைந்தார் அவர். சென்னைக்குச் செல்ல வேண்டும். பேருந்தில் தன் பிள்ளையுடன் அமர்ந்தார் அவர். வண்டி புறப்பட்டது. பிள்ளைக்குப் பத்து வயது. நடத்துனர் வந்தார். பத்து வயது ஆகாத பிள்ளைகளுக்கு அரை டிக்கட் வாங்கினால் போதும் என்பது அப்போதைய விதி. நடத்துனர் ஒரு முழு டிக்கட்டையும், ஒரு அரை டிக்கட்டையும் வழங்கினார். பேருந்து புறப்பட்டது!
இரவு மணி பன்னிரெண்டு ஆகிவிட்டது! நடத்துனரைக் கூப்பிட்டார் பிள்ளையோடு வந்தவர். ""என் பையனுக்கு பத்து வயது பூர்த்தியாகி இப்பொழுது முதல் பதினொன்று வயது தொடங்கி விட்டது. அவன் முழு டிக்கெட்டுக்கான தகுதியைப் பெற்றுவிட்டான். அதனால் இன்னொரு அரை டிக்கெட்டைக் கொடுங்கள்!'' என்றார். நடத்துனர் அந்த மனிதரின் நேர்மையை வியந்தார். பயணச்சீட்டையும் வழங்கினார்.
அதே பிரமுகர் சில வருடங்களுக்குப் பின் சென்னை மாகாண முதல்வரானார். வெளியூர் பயணம் முடிந்து வீடு திரும்பினார். வீட்டிற்கு முன்பு வாகனத்தை நிறுத்தி ஓட்டுனர் டிக்கியைத் திறந்து பலாப்பழம் ஒன்றை எடுத்து வந்தார். இதைப் பார்த்த முதல்வர், ""இது ஏது?'' என்று கேட்டார்.
""ஐயா, நீங்க தங்கியிருந்த விருந்தினர் விடுதி தோட்டத்தில் இருந்த மரத்தில் காய்த்தது!
விடுதிக் காவவர் பறித்து அய்யாவுக்குக் கொடுங்கன்னு தந்தார்!''
""அப்படியானால் இது சர்க்கார் சொத்து!....இதோட விலையை விசாரிச்சு பணத்தைக் கருவூலத்தில் கட்டிவிடு!'' என்று அப்போதே பணத்தை எடுத்து ஓட்டுனரிடம் வழங்கினார் முதல்வர்.
நேர்மை தவறாத அந்த மாமனிதர்தான் "ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்!' 1947 இல் இருந்து 1949 வரை தமிழக முதல்வராக இருந்தவர்!