அந்தத் துறவியின் ஆசிரமத்தின் அருகே ஒரு ஆலமரம். அதிலிருந்து இலைகள் உதிர்ந்த வண்ணம் இருந்தன. அவைகள் அழகாக இருந்தன. கீழே விழுந்திருக்கும் இலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த துறவி எழுந்தார். ஆலமரத்தடிக்குச் சென்று இலைகளைப் பொறுக்கினார். அவைகளை நன்றாக அலம்பினார். பின் சாப்பாட்டு இலைகளாக அவைகளைத் ஈர்க்குச்சி மூலம் தைத்துக் கொண்டிருந்தார். அற்புதமாக தையல் இலைகள் தயாராயின!
இதை கவனித்த ஒருவர், துறவியிடம், ""தங்கள் பொன்னான நேரத்தை இப்படி இலை தைப்பதில் செலவழிக்கலாமா?...., இங்கு அதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்களே!....நீங்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.
அதற்கு பெருந்துறவியான அவர் புன்னகை செய்தபடி, ""வேலை என்பதே நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவழிப்பதுதான்....மற்றும் வேலை என்பது நேரத்தைப் பொன்னாகத்தான் ஆக்குகிறது! இந்த இலைகள் உணவு உண்பவர்களுக்குப் பயன்படும்! இந்த இலைகள் சும்மா இருந்திருந்தால் குப்பைக்குப் போயிருக்கும்! ஆனால் இப்பொழுதோ, ஜீவ ரசத்தைப் பெருக்கும் அன்னைத் தாங்கும் பாக்கியம்
இதற்குக் கிடைத்துவிட்டது! சும்மா இருக்கும் நேரமும் குப்பைக்குத்தான் போகும்! இலையும் பயனுடையதாக ஆகிவிட்டது! நானும் பயனுடையவனாக ஆகிவிட்டேன்! வேலை என்பது ஒரு யோகம்! சிந்தனைகளை ஒருமிக்கிற ஒரு பயிற்சி! ஒரு ஆக்கபூர்வம்! ஒரு முழுமை!'' என்றார்.
கேள்வி கேட்டவர் அதை அனுபவ பூர்வமாக உள்ளத்தில் உணர்ந்தார். அவருக்கு செயலும் அதன் பயனும் பற்றிய ஞானம் ஏற்பட்டது! உள்ளத்தில் சுறுசுறுப்பும் வேலைக்கான ஆர்வமும் அவரது கண்களில் மின்னின!
துறவியைக் கைகூப்பி நமஸ்கரித்தார்!
அந்தத் துறவிதான் "பகவான் ஸ்ரீரமணர்! '