எண்ணும் எழுத்தும் கண்ணெனச் சொன்ன
ஐயன் வள்ளுவர் வழி நடப்போம்!
மண்ணகந் தன்னில் உயிரினம் எல்லாம்
வளமுடன் வாழ்ந்திடும் நெறி படைப்போம்!
எளிமைகண் டிரங்கிடு எனறார் பாரதி
ஏழைகள் தம்மை அரவணைப்போம்!
வலிமை கண்ட தோளினராக
வஞ்சகம் சாய்த்திடக் கரமிணைப்போம்!
வாடிய பயிர்கண் டுருகிய வள்ளலார்
வழங்கிய கருணையை வளர்த்தெடுப்போம்!
கூடியே வாழ்ந்து கோபுரமாக
கொஞ்சிடும் அன்பு மலர் தொடுப்போம்!
எங்கும் பாரடா இப்புவி மக்களை
என்றார் பாரதி தாசனவர்!
பொங்கும் அன்பால் மானிடப் பரப்பில்
பொதுமையை வேண்டிய நேசனவர்!
பொக்கை வாய்ச் சிரிப்பில் மக்களைக் கவர்ந்தே
பொலிந்தே நிலைத்தார் காந்திமகான்!
செக்கை இழுத்தே சிவந்த கரங்களால்
சீர்மைகள் குவித்தார் சிதம்பரனார்!
அழகிய இயற்கை உலகை அமைதியின்
அரும்பூங் காவாய்த் ஆக்குங்கள்!
சான்றோர் வாழ்க்கையைச் சான்றெனப் படித்து
சரித்திரம் படைப்போம் வாருங்கள்!
-பூவரசி மறைமலையான்