தம்பி, தம்பி தேர்வெழுது!
தரமாய் நீயும் தேர்வெழுது
வெம்பி வருந்திப் புலம்பாமல்
விரைவாய் நீயும் தேர்வெழுது!
என்ன கற்றாய் என்றறிய
இதுவொன் றேதான் சாட்சியடா!
நன்றாய் நீயும் எழுதிவிட்டால்
நாளை வெற்றிக் காட்சியடா!
தெரிந்த விடையை முன்னெழுது
தெரியா விடையைப் பின்னெழுது
புரிந்து கொண்டு எழுதுவதே
புத்தி சாலித் தனமாகும்!
முத்து முத்தாய் நீ எழுத
முழுதாய் மதிப்பெண் வந்துவிடும்!
கொத்துக் கொத்தாய் மதிப்பெண்ணைக்
கூட்டி வந்து தந்துவிடும்!
மையை உதறி எழுதாதே!
மதிப்பெண் குறைய வாய்ப்பிருக்கு!
பொய்யை எழுதி வைக்காதே...
...பொதுவில் அதிலே ஏய்ப்பிருக்கு!
காலம் கடந்து நிற்பதற்கும்
கவனம் கொண்டு தேர்வெழுது!
ஓலம் போட்டுப் பயனில்லை!
ஒழுங்காய்ப் படித்துத் தேர்வெழுது!