உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
பாராட்டுப் பாமாலை! 22
மென்மை உளமும் உயிரன்பும்
மிகவும் பெற்று உள்ளவராய்
சென்னை இராயப்பேட்டையிலே
சேகர் என்பவர் வாழ்கின்றார்!
ஒவ்வொரு நாளும் கிளிகளுக்கு
உணவு படைப்பதைப் பல ஆண்டாய்
எவ்வொரு தொய்வும் இல்லாமல்
இன்று வரையிலும் செய்கின்றார்
வீட்டு மொட்டை மாடியிலே
விருப்புடன் கிளிகள் அமர்ந்துண்ண
நீட்டியமைத்த மரச்சட்டம்
நிறைய உணவு வைக்கிறார்
ஆயிரக்கணக்கில் பைங்கிளிகள்
அமர்ந்தே உணவு உண்ணுவதை
நேயர்கள் காணத் தொலைக்காட்சி
நேர்த்தியாகக் காட்டியது!
உயிர்கள் இடத்தில் அன்பு வைக்க
உரைத்தார் நமது பாரதியார்
உயிராய் அதனைக் கடைப்பிடிக்கும்
உயர்ந்த மனிதர் சேகரென்போம்!
கிளிகளின் உணவுச் செலவுகளைக்
கேட்டால் நமக்கு மலைப்பு வரும்!
எளிய மனிதர் சேகர் பணம்
இரண்டு ஆயிரம் ரூபாய்கள்
நாளும் செலவு செய்கின்றார்
நல்லார் சிலரும் உதவுகின்றார்
மூளும் அன்பு மீதூற
முனைந்தே அவரை வாழ்த்துவம் நாம்!
- புலவர் முத்து முருகன்