நேர்மை!

பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு "பி' பிரிவில் ஆறுமுகம் - சம்பத் இருவரும் பயின்று வந்தார்கள். நெருங்கிய நண்பர்கள். ஆறுமுகம் தன்மையானவன், சம்பத் விளையாட்டு புத்தியுடையவன். சம்பத்துடைய குணத்தை
நேர்மை!

பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு "பி' பிரிவில் ஆறுமுகம் - சம்பத் இருவரும் பயின்று வந்தார்கள். நெருங்கிய நண்பர்கள். ஆறுமுகம் தன்மையானவன், சம்பத் விளையாட்டு புத்தியுடையவன். சம்பத்துடைய குணத்தை நன்கு புரிந்து வைத்திருந்த ஆறுமுகம், அவ்வப்போது பிறர் துன்புறுவதைக் கண்டு மகிழும் அவனுடைய போக்கை மட்டும் மாற்ற இயலாதவனாக இருந்தான்.
 பரீட்சை முடிந்து, பள்ளி விடுமுறை அறிவித்தார்கள். ஆறுமுகம், தன்னுடைய கிராமத்துக்கு வரும்படி சம்பத்தை அழைத்தான்.
 "ஐயோ, பட்டிக்காட்டுக்கா கூப்பிடறே? நீ வேணுமானா இங்கேயே, என் வீட்டிலேயே தங்கிவிடேன். என் அம்மா-அப்பாவிடம் அதற்கு அனுமதி பெற என்னால் முடியும். பட்டணத்து ஜாலி வாழ்க்கை அங்கே கிடைக்குமா?'' என்றான் சம்பத்.
 கிராமம் என்றாலே இளப்பம் அவனுக்கு. ஆறுமுகமும் கிராமத்துப் பையன்தான் என்றாலும், பள்ளிக்குப் பக்கத்திலிருந்த பள்ளி மாணவர்களுக்கான அரசு விடுதியில் தங்கிப் படிக்கிறான் என்பதால் இவன் மீது சம்பத்துக்குத் தனி நட்பு இருந்தது.
 "ரொம்ப நாள் வேண்டாம். இரண்டே இரண்டு நாட்கள் அங்கே இருந்துவிட்டு வரலாம், வா. எப்போது பார்த்தாலும் டி.வி., வீடியோ, சினிமான்னு பொழுதுபோக்க போரடிக்கலியா உனக்கு? ஒரு மாறுதலுக்கு என் ஊர்ப் பக்கம்தான் வாயே...'' என்று வற்புறுத்தி அழைத்தான் ஆறுமுகம்.
 சம்பத்தும் தன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக் கொண்டு வந்தான். ஆறுமுகம், விடுதியில் தன் அறையிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டான். இருவருமாக கிராமத்துக்குப் புறப்பட்டார்கள்.
 பூம்பொழில் கிராமம்தான் எவ்வளவு சுத்தமாக இருந்தது! புகை இல்லை; எரிச்சல் இல்லை; இரைச்சல் இல்லை; யந்திரத்தனம் இல்லை. எங்கு பார்த்தாலும் பசுமை, அமைதி, அழகு, அதுவரை அனுபவித்தறியாத சுகமான இயற்கைக் காற்று. கால்நடைகளும், கழனிகளும் சம்பத்துக்குப் புதுக்காட்சிகள்தான் என்றாலும், அந்தப் பசுமை செழித்த இயற்கைச் சூழலில் அவன் உள்ளம் குதூகலிக்கத்தான் செய்தது.
 அறுமுகத்தின் வீட்டில்தான் அவனை எப்படியெல்லாம் உபசரித்தார்கள்! அந்த அன்புதான் மனதுக்கு எத்தனை இதமாக இருந்தது! மணமணக்கும் தேங்காய் எண்ணெயில் செய்த பலகாரங்களை ருசித்து உண்ட அவன், இப்படி மனம் மகிழ நேரமும் அமைந்ததை எண்ணி மகிழ்ச்சி கொண்டான். பிறகு, ஆறுமுகத்தின் ஆலோசனைப்படி, அவனுடன் கிராமத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான்.
 திவலைகள் கட்டியம் கூற, நீர் நிறைந்த பெரியகுளம் ஒன்று அவ்விருவரையும் குளுமையாக வரவேற்றது.
 "குளிப்போமா?'' என்று சம்பத் ஆவலுடன் கேட்டான்.
 "உனக்கு நீச்சல் தெரியுமா? ஆறுமுகம் வியப்புடன் கேட்டான்.
 "சென்னையில ஃபைவ் ஸ்டார் ஓட்டல் நீச்சல் குளத்ல நீச்சல் கற்றிருக்கிறேன். அதனால பிரமாதமா நீச்சலடிப்பே!''
 "அய்யோ!... ஓட்டல் ஸ்விம்மிங் பூல்ல பழகினவனா நீ! அப்படின்னா இந்தக் குளத்துல நீந்த வேண்டாம். ஏன்னா சிலசமயம் இந்த குளத்துக்குள்ள அடியில பாசி, பாறைன்னு இருக்கும். வழுக்கி விட்டுடும். உனக்கு ஆபத்தாகிப் போயிடும்,'' என்று சொல்லித் தடுத்தான் ஆறுமுகம்.
 ஆறுமுகத்தையும் மீறி, வீம்பாக குளத்தினுள் குதித்தால் என்ன என்ற சம்பத்துடைய வறட்டு கெüரவ குணம் அவனைத் தூண்டிவிட்டது. ஆனாலும் ஆபத்தைத் தானாக வரவழைத்துக் கொள்வனேன் என்று பயத்துடன் யோசித்தான். "ஹூம்...' என்று போலி ஏக்கத்தை வெளிப்படுத்திய அவன் சுற்று முற்றும் பார்த்தான்.
 குளக்கரையில் ஒரு வேட்டியும் ஒரு சட்டையும் மடித்து வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்தவுடனேயே அவனுக்கு ஒரு குரூரமான எண்ணம் தோன்றியது. "
 "ஆறுமுகம், இந்த வேட்டி சட்டையை எடுத்து ஒளித்து வைத்து விடலாமா? குளத்தில் குளிப்பவன் வந்து பார்த்துத் திண்டாடுவான்; தவிப்பான். பார்க்க தமாஷா இருக்கும்!...'' என்றான் உற்சாகத்துடன்.
 "தப்பு சம்பத்!அவர் ஒரு ஏழை விவசாயி. அவர் கழனியில் வேலை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். குளித்துவிட்டு வரும் அவர், தன்னுடைய இந்த வேட்டி, சட்டையைக் காணவில்லை என்றால், ரொம்பவும் தவித்துப் போவார். அவரிடம் மாற்று உடைகூட இருக்கிறதோ இல்லையோ! அதுமட்டுமில்லே, அரையில் கட்டிய சிறு துண்டோடு, எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் தன் வீட்டிற்கு நடந்து போக ரொம்பவும் கூச்சப்படுவார்.....''
 சம்பத், ஆறுமுகத்தை வியப்புடன் பார்த்தான். "இந்த விளையாட்டால் சம்பந்தப்பட்டவருக்கு இத்தனை வேதனையா!' என்று யோசிக்க ஆரம்பித்தான்.
 உடனே ஆறுமுகம், "அதற்குப் பதிலாக இப்படிச் செய்வோம். அவருடைய சட்டைப் பையில் ஓர் ஐந்து ரூபாய்த் தாளைச் செருகி வைப்போம். அதைப் பார்க்கும் அவர் மிகவும் சந்தோஷப்படுவார்! நமக்கும் அவருடைய மகிழ்ச்சி மனநிறைவைத் தரும்,' என்றான்.
 சம்பத் தன் எண்ணத்திற்காக ரொம்பவும் வெட்கப்பட்டான். "ஆறுமுகம், நான் சொன்னது தப்புத்தான். உன் எண்ணப்படியே செய்யலாம்!'' என்றான்.
 அதேபோல அந்த விவசாயியின் சட்டைப் பையில் ஓர் ஐந்து ரூபாய்த் தாளை திணித்துவிட்டு இருவரும் ஓடிப்போய்ப் பக்கத்துக் கோவில் சுவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார்கள்.
 அந்த விவசாயி குளித்து விட்டுக் கரையேறினார். உடலைத் துண்டால் துடைத்துக்கொண்டு, சட்டை, வேட்டியை அணிந்து கொண்டார். தற்செயலாகத் தன் சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்த அவர், அதில் ஓர் ஐந்து ரூபாய் நோட்டு இருப்பது கண்டு திடுக்கிட்டார். அதை வெளியே எடுத்து அதைத் திரும்பத் திரும்பப் பார்த்தார். "எப்படி இந்தப் பணம் என் பைக்குள் வந்தது?' என்று யோசித்தார். ஒன்றும் புரியவில்லை. சுற்று முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று கண்களால் தேடினார்.
 எதிர்பாராமல் கிடைத்த அந்தப் "பரிசை'க் கண்டு அவர் ஆனந்தக் கூத்தாடவில்லை; அகமகிழவில்லை. பிறகு ஒரு தீர்மானத்திற்கு வந்து கோவிலுக்குள் சென்றார்.
 "கடவுளே! இந்தப் பணம் என் சட்டைப் பைக்குள் எப்படி வந்ததோ தெரியவில்லை. ஆனால் இது எனக்குச் சொந்தமில்லை; கீழே கிடந்து, நானாக எடுத்துப் பையில் போட்டுக் கொள்ளவுமில்லை. யாரிடமிருந்தும் திருடவுமில்லை. எனக்கு எந்த வகையிலும் உரிமையாக முடியாத பணம் இது. இதைப் பயன்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. இது யாருடையதாக இருக்கும் என்று கண்டுபிடிக்க, நான் யாரையும் போய் விசாரிக்கப் போவதில்லை. ஏனென்றால், யாரேனும் தன்னுடையது என்று பொய் சொல்லக்கூடும். ஆகவே, இந்தப் பணத்தை உன் உண்டியலில் போட்டு விடுகிறேன். மாதம் ஒருமுறை இந்த உண்டியலைத் திறந்து கிடைக்கக் கூடிய பணத்தை வைத்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வார்களே, அந்தப் பணிக்கு இந்தப் பணம் ஓரளவு உதவக் கூடும்' என்று சற்றே உரத்து வேண்டிக் கொண்ட அவர், அந்த ஐந்து ரூபாய்த் தாளை உண்டியலில் செலுத்தி, கடவுளை வணங்கி விட்டுச் சென்றார்.
 ஆறுமுகத்திற்கும்கூட ஒரே பிரமிப்பு! சம்பத் ஆச்சர்யத்தால் உறைந்தே போய்விட்டான். இப்படிக்கூட கொஞ்சமும் சுயநலமில்லாத ஒரு ஏழை இருக்க முடியுமா என்று அவ்விருவருமே அதிசயித்தனர். அது அந்த கிராமத்தின் ஒழுக்கம் என்பதை சம்பத் புரிந்துகொண்டான். முதலில் திண்டாட வைக்க நினைத்தவன், இப்போது அவனே அறியாமல் இரு கரங்களையும் கூப்பி அந்த விவசாயியை வணங்கினான்.
 நேர்மையான வாழ்வில்தான் மகிழ்ச்சி நிறையும் என்பதைப் புரிந்து கொண்டான்.
 - பிரபுசங்கர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com