உரைந்தாரை மீதூரர் மீக்கூற்றம் பல்லி
நெரித்த சினைபோலும் நீளிரும் புன்னைப்
பொரிப்பூ இதழுறைக்கும் பொங்குநீர்ச் சேர்ப்ப!
நரிக்கூஉக் கடற்கெய்தா வாறு. (பாடல்-22)
பல்லியது நெரிக்கப்பட்ட முட்டையைப்போல மலர்ந்திருக்கின்ற நீண்ட பெரிய புன்னை, பொரியைப் போன்ற பூக்களினது இதழ்களைப் பரப்பும் நீர் மிகுந்த கடல் நாடனே! தம்மை நலிய உரைத்தவர்களை, செயலால் மிக் கொழுகாது சொற்களால் தாமும் மிக்கொழுகல், நரியின் கூவிளியால் கடல் ஒலியைத் தாழ்விக்கமாட்டாதவாறு போலும். (க.து.) வீரர்கள் தம்மை நலிய உரைத்தார்களைச் செயலால் அடுதல் வேண்டும். "நரிக் கூஉக் கடற்கெய்தா வாறு' என்பது பழமொழி.