சிறியோர் சிறியோரே
தக்காரோ டொன்றித் தமராய் ஒழுகினார்
மிக்காரால் என்று சிறியாரைத் தாம்தேறார்
கொக்கார் வளவய லூர! தினலாமோ
அக்காரம் சேர்ந்த மணல். (பாடல்-18)
மீன் உண்ணும் கொக்குகள் நிறைந்திருக்கின்ற நீர்வளம் பெற்ற வயல்களை உடைய மருதநிலத் தலைவனே! சர்க்கரையோடு கலந்திருக்கின்ற மணலை, சர்க்கரையென்று கருதி உண்ணலாமோ; (அதுபோல்) தகுதி உடையாரோடு பொருந்தி அவர் உறவினரைப்போல் நெருங்கி ஒழுகினார் (ஆதலால்), குணத்தினால் மிக்கவர் என்று அறிவிற் சிறியாரை, பெரியோர்கள் தெரிந்து நட்புக் கொள்ளார். (க.து.) சிறியார் பெரியாரோடுஇணங்கியிருப்பினும் அவரோ டிணங்கார் அறிவுடையோர். 'தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல்' என்பது பழமொழி.