அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் தீங்குறுதல் காண்டுமால் - பொங்கி
அறைப்பாய் அருவி அணிமலை நாட!
உறற்பால யார்க்கு முறும். (பாடல்-15)
மிகுந்து கற்பாறையின்கண் பாயாநின்ற அருவிகளையுடைய மலை நாடனே! அழகிய இடமகன்ற ஆகாயத்தினின்று, மிகுந்த வெண்மையான கிரணங்களை வீசுகின்ற, மதியும், கோளாற் றீமை யடைதலைக் காண்கின்றோம். (ஆதலால்) தமக்கு வரக்கடவ துன்பங்கள் தம்மை மாற்றும் இயல்புடையாரே யெனினும் விடாது அவரைச் சென்று பற்றி நிற்கும். (க-து.) வருவது வந்தே தீரும். அதை மாற்றுதலும் ஆகாது; அதன் பொருட்டு வருந்துதலும் ஆகாது. "உறற்பால யார்க்கும் உறும்' என்பது இதில் வந்த பழமொழி.