ஹெர்மன் ஜென்சன் பாதிரியார் 1897இல் 3624 தமிழ்ப் பழமொழிகளை ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டார். அந்நூலின் முன்னுரையில் அத்தொகுப்புக்கு உதவிய, அதற்கு முன் வெளியான பழமொழி நூல்களின் பட்டிலைத் தந்துள்ளார். அதில், 1888இல் சத்திய நேசன் என்பவர் வெளியிட்ட 500 பழமொழிகளைக் கொண்ட நூல் பற்றித் தெரிவித்துள்ளார். அதே ஆண்டில் 3000 வரையுள்ள "பழமொழித் திரட்டு' பற்றிய விவரம் இடம்பெறவில்லை.
அண்மையில் மாதவன் என்பவர் வாயிலாக 1888இல் வெளியான பழமொழித் திரட்டின் அச்சுப்பிரதி எனக்குக் கிடைத்தது. இதில் பழமொழிகள் அகரவரிசைப்படி திரட்டித் தரப்பட்டுள்ளன. ஹெர்மன் பாதிரியாரும் தன் பழமொழித் தொகுப்பின் பின்னிணைப்பாக அகரவரிசைப் பட்டியலைத் தந்துள்ளார்.
பழமொழித் திரட்டின் பக்கம் 21இல் உள்ள பழமொழிகளே பாதிரியாரின் நூலில் இடம்பெற்றுள்ளன. ஆனால்,
"ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்'
"உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லாது'
"உடையவன் இல்லாச் சேலை ஒருமுழங் கட்டை'
என்பன போன்ற கருத்தாழம்மிக்க பழமொழிகள் அப்பாதிரியார் தொகுப்பில் இடம்பெறாதது வியப்பாக இருக்கிறது! இப்பொழுது கிடைத்துள்ள பழமொழித் திரட்டு, அது அச்சு நூலாக வெளிவந்த பத்தாண்டு காலத்து இடைவெளியில் தமிழ்மொழி ஆய்வில் ஆர்வங்காட்டியவராக இருந்த அப்பாதிரியாரது பார்வைக்குக் கிடைத்திருக்குமாயின், அவரது தொகுப்பு மேலும் சிறப்புடையதாக அமைந்திருக்குமோ எனக் கருதத் தோன்றுகிறது.